பதிவு செய்த நாள்
08 மார்2012
00:09
ஓசூர்: ஐரோப்பிய நாடுகளுக்கு, சீன ரோஜா மலர்கள் மலிவு விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்துள்ளது. இதனால், மலர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உலகளவில், ஹாலந்து, டென்மார்க், கென்யா, சீனா ஆகிய நாடுகளில், ரோஜா மலர் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இந்தியாவில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், விவசாயிகள் அதிகளவில் ரோஜா மலர்களை உற்பத்தி செய்கின்றனர்.ரூ.250 கோடிக்கு ஏற்றுமதிமொத்தம், 5,000 ஏக்கரில் ஆண்டு முழுவதும், ரோஜா மலர் சாகுபடி நடக்கிறது. 350க்கும் மேற்பட்ட ரோஜா மலர் பண்ணைகளில், பசுமை குடோன்களில், ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ஆண்டு முழுவதும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அரசு உதவியுடன், அமுதகொண்டப்பள்ளியில் மிகப் பெரிய, "டான்ப்ளோரா' ரோஜா மலர் ஏற்றுமதி மையமும் செயல்படுகிறது. காதலர் தினம், அன்னையர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட, பல்வேறு வெளிநாட்டு பண்டிகைகளை குறி வைத்து, ஆண்டுதோறும், 250 கோடி ரூபாய்க்கு, ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகின்றன.தாஜ்மஹால், ரெட் ரோஸ், எல்லோ ரோஸ், வெள்ளை ரோஸ் உள்ளிட்ட, 40 வகை ரோஜா மலர்களை, விவசாயிகள் ஏற்றுமதி செய்கின்றனர். சென்ற பிப்ரவரி மாதம், காதலர் தினத்தையொட்டி, ஓசூர் விவசாயிகள், வெளிநாடுகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தனர்.சீனா கடும் போட்டிஆனால், சீன விவசாயிகள், ஐரோப்பிய நாடுகளுக்கு மலிவு விலையில், தரமான ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்து வருவதால், ஓசூர் விவசாயிகளுக்கு வழக்கமாக கிடைத்த வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்தன.வெறும், 30 லட்சம் ரோஜாவுக்கான, "ஆர்டர்' மட்டுமே கிடைத்தது. மற்ற நாட்டு, "ஆர்டர்'களையும் சேர்த்து, இந்த முறை, ஓசூர் விவசாயிகள், 50 லட்சம் மலர்களை மட்டுமே ஏற்றுமதி செய்தனர்.தற்போது, சீன விவசாயிகள், ஓசூர் ரோஜாக்களை விட குறைந்த விலைக்கு தங்களின் ரோஜாக்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அதனால், ஐரோப்பிய நாடுகளின் ஆர்டர்கள் குறைந்ததால், ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கான ரோஜா மலர் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
விலை குறைவால் விவசாயிகள் அதிருப்தி பேரிகையை சேர்ந்த மலர் விவசாயி சிவா கூறியதாவது:
தற்போது, ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள் முழுவதும் உள்ளூர் விற்பனைக்காக மட்டுமே அனுப்பப்படுகின்றன. உள்ளூர் சந்தையிலும் ரோஜா மலர்களுக்கு மவுசு குறைந்து தரமான, 20 பூக்கள் கொண்ட ஒரு "பஞ்ச்' மலர்கள் தற்போது, 50 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது.ஒரு "பஞ்ச்' மலர்கள், 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்றால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும். தற்போது, சீன விவசாயிகள், ஐரோப்பா நாடுகளுக்கு குறைந்த விலைக்கு ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்வதால், ஓசூர் ரோஜா மலர்களுக்கு சர்வதேச சந்தையில் வரவேற்பு குறைந்துள்ளது.ஓசூர் பகுதியில் மோசமான குளிர்ந்த நிலை மாறி, கடும் வெப்பமும், வெயிலும் அடிப்பதால், வறட்சியால் தரமான ரோஜா மலர்களை உற்பத்தி செய்ய முடிவதில்லை. நோய் தாக்குதலும் அதிகமாகி வருகிறது.மின்வெட்டால், ரோஜா செடிகளுக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. அதனால், வெளிநாட்டு ஏற்றுமதி மட்டுமில்லாது அனைத்து வகைகளிலும் ரோஜா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் மார்ச் மாதம் முதல், ரோஜா விவசாயம் மீண்டும் சுறுசுறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|