பதிவு செய்த நாள்
09 மார்2012
00:00
சேலம்,: வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் துவரம் பருப்பு, துவரை ஆகியவை வருவதால், இதன் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இது, வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்திய அளவில், 2008 ஆகஸ்ட் முதல் பருப்பு விலையில் கடும் உயர்வு ஏற்பட்டு வருகிறது. பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற் கொண்ட போதிலும் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை.வடமாநிலங்களில், ஜனவரி மாதத்தில் துவங்கிய துவரை அறுவடை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டுகளான விருதுநகர், சென்னை, சேலம் லீபஜாருக்கு மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு, மில்களுக்கான துவரை வரத்தும் திடீர் என, அதிகரித்தது. ஜனவரி மாதம் கடைசி வாரத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பருப்பு வரத்து குறைந்து போனது.இதனால், இதன் விலை உயர்ந்தது. இந்நிலையில், தற்போது பருப்பு வகைகளின் விலை குவிண்டாலுக்கு, 200 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த வாரம், மொத்த விலையில் ஒரு குவிண்டால் துவரம் பருப்பு, 6,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது செவ்வாயன்று குவிண்டாலுக்கு, 200 ரூபாய் வரை குறைந்து, 6,600 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் ரகம், 6,000 ரூபாயில் இருந்து 5,800 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 5,500 ரூபாயில் இருந்து, 5,300 ரூபாய் என்ற அளவிற்கும் குறைந்தது.துவரம் பருப்பின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றின் விலை, எவ்வித மாற்றம் இன்றி ஒரே சீராக உள்ளது.இது குறித்து பருப்பு வியாபாரி சீனிவாசன் கூறியதாவது:பர்மா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பருப்புகளை, சென்னையில் இறக்குமதி செய்யும் குறிப்பிட்ட மூன்று வடமாநில வியாபாரிகள், தாங்கள் லாபம் சம்பாதிக்க பருப்பு விலையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி வருகின்றனர்.தற்போது வடமாநிலங்களில் பருப்பு விளைச்சல் அதிகரித்து, அதிக அளவில் விற்பனைக்கு வரும் நிலையில், வியாபாரிகளின் பதுக்கல் காரணமாக, கடந்த மாதம் பருப்பு விலையில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக, 500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. தற்போது உயர்த்தப்பட்ட விலையில், 200 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.இது, பெரிய வியாபாரிகளுக்கு லாபத்தையும், நடுத்தர மற்றும் மளிகை கடை வியாபாரிகளுக்கு இழப்பையும் ஏற்படுத்தும். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடப்பாண்டு பருப்பு விளைச்சல் அதிகளவில் உள்ளதால், துவரம் பருப்பின் விலையில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சீனிவாசன் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|