பதிவு செய்த நாள்
30 மார்2012
00:11
நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், உள்நாட்டில் பால் உற்பத்தி, கடந்த ஆண்டை விட, 7 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பால் மற்றும் பால் பொருட்கள் அளிப்பு உயரும் என்ற மதிப்பீட்டால், இவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது என, பால் உற்பத்தித் துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, "அமுல்' என்ற பிராண்டில் பால் பொருட்களை விற்பனை செய்து வரும், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தும் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி கூறியதாவது:
பால் உற்பத்தி:நடப்பாண்டில், உள்நாட்டில் பால் உற்பத்தி, 13.20 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு 12.30 கோடி டன் என்ற அளவில் இருந்தது. பால் பொருட்களின் விலை அதிகரித்ததை அடுத்து, கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பால் விற்பனையின் மூலம், நல்ல விலை கிடைத்தது.
இதையடுத்து, நாடு தழுவிய அளவில் பால் உற்பத்தி, படிப்படியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, பாலின் விலை மிகவும் அதிகரித்ததால், பால் பவுடர் மற்றும் நெய் போன்றவற்றின் விலையும் பன்மடங்கு உயர்ந்தது. இந்நிலையில், தற்போது, பால் உற்பத்தி அதிகரித்துள்ளதால், பால் மற்றும் பால் பொருட்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது. இவ்வாறு சோதி கூறினார்.
மொத்த விலை குறியீட்டு எண் கணக்கிடுவதில், பால் விலை, 4.37 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. பாலின் விலை உயர்வு, நாட்டின் பணவீக்க உயர்விற்கும் வழி வகுத்தது. தற்போது, பால் உற்பத்தியும், அளிப்பும் உயர்ந்துள்ளதால், பணவீக்கம் குறையும். இது, மத்திய அரசுக்கு ஆறுதல் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, எஸ்.எம்.சி.புட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சந்தீப் அகர்வால் கூறும்போது, "பால் பவுடர் மற்றும் நெய் விலை, தீபாவளிக்குப் பிறகு, படிப்படியாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இவ்விரு பொருட்களின் விலை, 20-25 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. மேலும், மத்திய அரசு, உள்நாட்டு தேவையைக் கருத்தில் கொண்டு, பால் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால், பால் மற்றும் பால் பொருட்கள் போதிய அளவிற்கும் அதிகமாகக் கிடைத்துள்ளது' என்றார்.
கொள்முதல்: எஸ்.எம்.சி.புட்ஸ் நிறுவனம், "மதுசூதன்' என்ற பிராண்டில், பால் பவுடர் மற்றும் நெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின், ஒரு கிலோ பால் பவுடர் 160 ரூபாய்க்கும், ஒரு கிலோ நெய் விலை 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பால் உற்பத்தி அதிகரித்துள்ளதை அடுத்து, பல மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் ஒரு லிட்டர் பால், 29 ரூபாயிலிருந்து 24 ரூபாயாகக் குறைந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.ஜி.சந்திரமோகன் கூறும்போது, "பால் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்ததை அடுத்து, 1 லட்சம் டன் பால் பொருட்கள், உள்நாட்டு அளிப்பிற்கு கிடைத்துள்ளது. இதுதவிர, 50 ஆயிரம் டன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் இறக்குமதியாலும், உள்நாட்டில், கூடுதலாக, பால் பொருட்கள் கிடைத்துள்ளன' என்றார்.
சர்வதேச நிலவரம்:உள்நாட்டில் மட்டுமின்றி, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பால் உற்பத்தி, பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையிலும் பால் மற்றும் பால் பொருட்களின் விலை, கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைந்துள்ளது.குறிப்பாக, உலக அளவில், பால் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து மற்றும் இதர நாடுகளை விட, அமெரிக்காவில் பால் விலை குறைவாக உள்ளது. இது, சர்வதேச சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, பால் விலை குறைய வழி வகுத்துள்ளது.
இது தவிர, உலக அளவில் வழக்கத்தைவிட குளிர் காலம் நீடித்துள்ள நிலையிலும், போதுமான அளவிற்கு பால் பவுடர் மற்றும் நெய் சப்ளை உள்ளது. இதன் காரணமாக, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|