பதிவு செய்த நாள்
02 ஏப்2012
00:17
மின்தடையால், தமிழகத்தில் ஸ்கூல் பேக் தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டு தரமான உள்ளூர் ஸ்கூல் பேக் விலை உயர்வது மட்டுமின்றி, தரம் குறைந்த வெளிமாநில பேக் விற்பனை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், ஈரோடு கடைவீதி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் லெதர், ரெக்சின் மூலம் ஸ்கூல் பேக், டிபன் பேக், எக்சிக்யூடிவ் பேக் உட்பட பல்வேறு வகையான பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த பைகள் அனைத்தும் தையல் இயந்திரங்களில் தொழிலாளர்களை கொண்டு தயார் செய்து, மாநிலம் முழுவதும் உள்ள பேக் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பதற்கு முன், பேக் உற்பத்தி அதிகரிக்கும். தொழிலாளர்கள், 24 மணி நேர ஷிப்ட் அடிப்படையில் பேக் தயாரிப்பில் ஈடுபடுவர்.தற்போது தமிழகத்தில் நிலவும் மின்தடை காரணமாக, மற்ற தொழில்களை போல ஸ்கூல் பேக் தயாரிக்கும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் பகலில் ஆறு மணி நேரம் மின்தடை செய்யப்படுவதால், அதற்கேற்ப ஸ்கூல் பேக் உற்பத்தி, 50 சதவீதம் குறைந்து விட்டது.
ஆனால், தேவை அதிகரிக்கும் என்பதால், ஸ்கூல் பேக் விலை 20 சதவீதம் வரை உயரும். மேலும், வெளிமாநிலங்களின் தரம் குறைந்த பேக்குகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்கூல் பேக் விற்பனையாளர்கள் கூறியதாவது:
சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியில் தயாரிக்கும் ஸ்கூல் பேக்குகள் தரமாக இருக்கும். நீண்டநாள் உழைக்கும். அதனால், இந்த பேக்குகளை அதிக அளவில் கொள்முதல் செய்வோம். நடப்பாண்டு மின்தடையால் உள்ளூர் பேக் உற்பத்தி குறைந்து விட்டது. மே மாத விற்பனைக்காக, 5,000 பேக் ஆர்டர் கொடுத்தால், 2,000 பேக் மட்டுமே தர முடியும் என ரெகுலராக சப்ளை செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும், பற்றாக்குறை மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக, உள்ளூர் தயாரிப்பு ஸ்கூல் பேக்குகள் விலை, 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தவிர பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் ஸ்கூல் பேக் அதிக அளவில் தமிழகத்துக்கு விற்பனைக்கு வருகிறது. தரம் குறைந்த இந்த பேக்குகள் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படுகின்றன.
இதனால், நடப்பாண்டு உள்ளூர் தயாரிப்பு ஸ்கூல் பேக்குகளை விட, வெளிமாநில பேக்குகள் அதிக அளவில் விற்பனையாக வாய்ப்புள்ளது. மின்தடையில் இதே நிலை நீடித்தால், உள்ளூர் பேக் உற்பத்தி முடங்கி, வெளிமாநிலங்களின் ஸ்கூல் பேக்குகள் தமிழகக் கடைகளை ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|