பதிவு செய்த நாள்
02 ஏப்2012
00:18
ஈரோடு:மின் வெட்டு, நூலிழை உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்வு, மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில், இரண்டு ஆண்டுகளில் 60 சதவீதம் வரை நசிவடைந்துள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு முன், 400க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கின. இதில், 30 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்தது. தற்போது, நூலிழை விலை உயர்வு, மின்தடை, பிளீச்சிங், டையிங், பிரின்டிங் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், ஜவுளி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஈரோடு ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலர் சிவானந்தம் கூறியதாவது:
ஈரோடு, சென்னிமலை, பெருந்துறை, விஜயமங்கலம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கின. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜவுளித் தொழில் பல்வேறு பிரச்னைகளால் நலிவடைந்துள்ளது.ஏற்றுமதியாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு ஆர்டர் பெற்ற சில நாட்களிலேயே நூலிழை விலை உயர்ந்து விடுகிறது. தவிர, ஏற்றுமதி செய்யும்போது, ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்படும் மாற்றத்தால், பெரும் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். மாவட்டத்தில், 400 ஆக இருந்த ஏற்றுமதி நிறுவனங்கள், 160 ஆக குறைந்து விட்டன. 60 சதவீதம் பேர், மாற்றுத்தொழிலைத் தேடிச் சென்று விட்டனர்.
ஏற்றுமதியாளர்களாக இருந்தவர்கள் சிலர், உள்ளூர் ஆடை ரகங்களைத் தயாரித்து, சந்தையில் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் கட்டட கட்டுமான ஒப்பந்ததாரர்களாகவும், ஜல்லி, கிரஷர் மணல், சிமென்ட் விற்பனைத் தொழிலுக்கும் மாறிவிட்டனர்.இதை தவிர்க்க, பருத்தியை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|