பதிவு செய்த நாள்
25 ஏப்2012
00:53
புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்திய ரயில்வே கையாண்ட சரக்குகள், 97.78 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி, சிமென்ட், உணவு தானியங்கள், இரும்புத் தாது, உருக்கு போன்ற சரக்குகள், பல்வேறு மாநிலங்களுக்கு, சரக்கு ரயில்கள் வாயிலாக கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த நிதியாண்டில், 99.30 கோடி டன் சரக்குகள் கையாள்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின், இந்த இலக்கு, 97 கோடி டன்னாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்ற நிதியாண்டில், ரயில்வே கையாண்ட சரக்குகள், 97.78 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் கையாளப்பட்ட சரக்குகளை விட, 5 சதவீதம் (92.15 கோடி டன்) உயர்வாகும்.இந்தியாவில், 17 ரயில்வே மண்டலங்கள் செயல்பட்டாலும், நான்கு மண்டலங்களில் மட்டுமே, 10 கோடி டன் அளவிற்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. குறிப்பாக, பிலாஸ்பூர் நகரை மையமாகக் கொண்ட, தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், 15 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், ரயில்வே கையாண்ட மொத்த சரக்குகளில், நிலக்கரியின் பங்களிப்பு மட்டும், 45-46 சதவீதம் என்றளவில் உள்ளது. இரும்புத் தாதுவும் அதிகளவில் கையாளப்பட்டுள்ளது என, அந்த அறிக்கையில் @மலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|