பதிவு செய்த நாள்
29 ஏப்2012
00:20
நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக இல்லாததால், பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.
தர குறியீடு:இந்நிலையில், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி) நிறுவனம் சென்ற புதனன்று, இந்தியாவில் முதலீடு மேற்கொள்வது தொடர்பான தரக்குறியீட்டை, "நிலையானது' என்ற அளவிலிருந்து, "இடர்பாடு' ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது' என்ற நிலைக்கு குறைத்தது.இதனால், அன்றைய தினம், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது. இதன் தாக்கம் வியாழனன்றும் நீடித்தது.
இருப்பினும், சர்வதேச நிலவரங்களால், வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 4 புள்ளிகள் உயர்ந்து, 17,134 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 2 புள்ளிகள் அதிகரித்து, 5,190 புள்ளிகளிலும் நிலை கொண்டது. இருப்பினும்,செவ்வாயன்று பங்கு வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்ததையடுத்து, ஒட்டு மொத்த அளவில், நடப்பு வாரத்தில், "சென்செக்ஸ்' 38 புள்ளிகள் உயர்ந்தது.
காலாண்டு முடிவுகள்:கடந்த 2011-12ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை, பல நிறுவனங்களும், வங்கிகளும் வெளியிட்டு வருகின்றன. இதுவரை வந்த முடிவுகளில், சில நிறுவனங்களின் செயல்பாடுகள் சாதகமாகவும், பல நிறுவனங்களின் முடிவுகள் பாதகமாகவும் உள்ளன. அதே சமயம், வங்கிகளின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்புகளை விட நன்கு வந்துள்ளன. ஆனால், சாப்ட்வேர் நிறுவனங்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை.
இருப்பினும், டி.சி.எஸ். நிறுவனம் நல்ல முடிவுகளை அளித்துள்ளது. எம்.ஆர்.எப்., யெஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஐ.டீ.பீ.ஐ. பேங்க் ஆகியவை முந்தைய ஆண்டின் காலாண்டை விட, சென்ற நிதியாண்டின் காலாண்டில் சிறப்பான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளன.விப்ரோ, மகிந்திரா ஹாலிடேஸ், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் ஸிங்க் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
தொகுப்பில் இருக்க வேண்டிய பங்குகள் டி.சி.எஸ்., எச்.சி.எல்., யெஸ் பேங்க், இந்தஸ்இந்த் பேங்க், எச்.டீ.எப்.சி. பேங்க், ஐ.டி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உங்கள் தொகுப்பில் இருக்கலாம்.
அட்சய திருதியையும், தங்கமும்:எங்கே, இந்தியாவில் தங்கம் கிடைக்காமல் போய்விடுமோ என்பது போல், இந்த அட்சய திருதியை தினத்தன்று மக்கள் தங்கத்தை வாங்கி குவித்தனர். தங்க கட்டிகள், நகைகள், கோல்டு ஈ.டி.எப். என, மக்கள் அதிகளவில் முதலீடு செய்தனர். எல்லோரும் ஒரே நாளில் தங்கம் வாங்கியதால் விலை கூடியதுதான் மிச்சம்.
அட்சய திருதியைக்கு பிறகும், தங்கத்தின் விலை அதிகரித்துதானே உள்ளது. இதனால், அன்றைய தினம் தங்கம் வாங்கியவர்களுக்கு லாபம் தானே என்று கேட்கத் தோணும். இந்த விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்ததால் ஏற்பட்ட விளைவாகும்.
கச்சா எண்ணெய்: உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது, இந்தியாவை மட்டுமின்றி, உலக நாடுகளின் பொருளாதாரத்தையே ஆட்டி வைக்கும் நிலைக்கு உருவெடுத்து வருகிறது. முன்பே, இது போன்ற விலை உயர்வு நிகழ்ந்திருக்கிறது என்றாலும், தற்போதைய சூழலில் இதன் விலை உயர்வு, இறக்குமதி செலவினத்தை அதிகரிப்பதுடன் டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பை மேலும் சரிவடையச் செய்யும். இது, பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
புதிய வெளியீடுகள்:எம்.சி.எக்ஸ். நிறுவனத்திற்கு பிறகு, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட, பொதுத் துறையைச் சேர்ந்த என்.பீ.சி.சி நிறுவனப் பங்கின் விலை மிகவும் சரிவடைந்து போனது. இதனால், இந்நிறுவன பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.இதன் பிறகு, பங்கு வெளியீட்டை மேற்கொண்ட எம்.டி. எஜூகேர் நிறுவனத்தின் பங்கின் விலை சத்தம் இல்லாமல் உயர்ந்தது. இதில், முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு 30 சதவீதம் வரை லாபம் கிடைத்தது.
ஆதரவு இல்லை:அண்மையில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்ட, திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி ஜூவல்லரி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, முதலீட்டாளர்களிடமிருந்து அதிக ஆதரவு கிடைக்கவில்லை.மிகவும் கஷ்டப்பட்டு, ஒரு மடங்கு அளவிற்கே பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தன. சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து, 0.65 மடங்கிற்கே விண்ணப்பங்கள் வந்தன. இதன் ஒரு பங்கின் விலை 120 ரூபாய் என்ற அளவில், நிர்ணயிக்கப்படலாம்.என்றாலும் இதன் பங்கில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
ஏனெனில், ரூபாயின் வெளிமதிப்பு, தொடர்ந்து சரிவடைந்து வருவதால், ஆபரண துறை நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து வருகிறது. எனவே, இந்நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் வரை பொறுத்திருந்து, விலை மிகவும் குறையும் பட்சத்தில், நீண்ட கால அடிப்படையில் இதன் பங்குகளை வாங்கி வைக்கலாம்.
வரும் வாரம் எப்படி?:ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளதால் அது, திங்களன்று பங்கு வர்த்தகத்தை ஓரளவிற்கு மேலே கொண்டு செல்லலாம். ஆனால், அண்மைக்காலமாக, பங்கு வர்த்தகம் மந்தமாகவே உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில், நாட்டில் பருவமழை நன்கு இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் என்ற அறிகுறி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பங்குச் சந்தை வேகமாக முன்னேற மேலும் ஓரிரு மாதங்கள் ஆகலாம்.
- சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|