பதிவு செய்த நாள்
01 மே2012
11:20
பீடி தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில், தமிழக அரசின் மானியம், 5,000 ரூபாயில் இருந்து, 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2.40 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும், திருநெல்வேலி, வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளனர். இவர்களுக்கு, மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை வழங்கும் பல்வேறு சலுகைகளில், ஒருங்கிணைந்த வீட்டு வசதி திட்டமும் ஒன்று.
மானியம் : இத்திட்டபடி, வீடு கட்டுவதற்கான செலவு, 45 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், 40 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. 5,000 ரூபாயை பயனாளிகள் செலுத்த வேண்டும்; இதை, தமிழக அரசு மானியமாக வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு சட்டசபையில் மானியக் கோரிக்கையின் போது பதிலளித்த தொழிலாளர் துறை அமைச்சர், "இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்துக்கு, வீடு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் என, தமிழக அரசு நிர்ணயித்து உள்ளது. அது போல, பீடி தொழிலாளர்களுக்கும் வீடு கட்டும் திட்டத்துக்கான கட்டுமானத் தொகை, ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும்' என அறிவித்தார்.
ரூ.60 ஆயிரமாக உயர்வு : இதற்கான பரிந்துரை, தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறைக்கு அனுப்பப்பட்டது. இதை ஏற்ற தொழிலாளர் நலத் துறை, பீடி தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்துக்கு, தமிழக அரசின் மானியத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் மானியமாக, 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். குறைந்தது ஓராண்டு இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்; சொந்தமாக இடம் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன், மானியத் தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|