பதிவு செய்த நாள்
28 மே2012
00:56
மத்திய அரசு, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.இந்தோனேஷியா:இந்தியா, அதன் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் தேவையில், 50 சதவீதத்தை, இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்கிறது.இந்தோனேஷியா மற்றும் மலேஷியாவில் இருந்து பாமாயிலும், பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து சோயா எண்ணெயும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயில், பெரும்பகுதி, இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதியாகிறது. இந்தோனேஷிய அரசு, உள்நாட்டு சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு துறையை ஊக்குவிக்கும் நோக்கில், கச்சா சமையல் எண்ணெய்க்கான ஏற்றுமதி வரியை இருமடங்கு உயர்த்தி 18 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. அதே சமயம், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான ஏற்றுமதி வரி 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு 7.5 சதவீதம் இறக்குமதி விதிக்கப்படுகிறது.இதனால், இந்திய வர்த்தகர்கள், இந்தோனேஷியாவில் இருந்து அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கின்றனர்.
வரி விலக்கு :கச்சா சமையல் எண்ணெய்க்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ள போதிலும், இந்தோனேஷியாவில் அதற்கு 18 சதவீத வரி விதிக்கப்படுவதால், இறக்குமதியாளர்கள், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், அதன் இறக்குமதி வரியை உயர்த்துவது குறித்து, மத்திய உணவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது குறித்த பரிந்துரைக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியவுடன், இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
மந்தநிலை மாறும்:இதையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை விட, கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் உள்நாட்டில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் மந்தநிலை மறைந்து, விறுவிறுப்படையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற ஏப்ரலில், தாவர எண்ணெய் இறக்குமதி 9 லட்சத்து 25 ஆயிரத்து 334 டன்னாக இருந்தது. இது, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரலில் 4 லட்சத்து 75 ஆயிரத்து 123 டன்னாக குறைந்து காணப்பட்டது.
சென்ற ஏப்ரலில், மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெயின் பங்களிப்பு 8 லட்சத்து 97 ஆயிரத்து 404 டன்னாகவும், அது சாராத எண்ணெயின் பங்களிப்பு 27 ஆயிரத்து 930 டன்னாகவும் உள்ளது.சென்ற 2011ம் ஆண்டு நவம்பர் முதல் நடப்பாண்டு ஏப்ரல் வரை, தாவர எண்ணெய் இறக்குமதி 31 சதவீதம் உயர்ந்து 36 லட்சம் டன்னில் இருந்த 47 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. இதில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் (ஆர்.பீ.டீ.பாமாயில்) 9 லட்சத்து 19 ஆயிரத்து 507 டன்னாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 89 சதவீதம் (4 லட்சத்து 87 ஆயிரத்து 90 டன்) அதிகமாகும்.
கனோலா:சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி, ஆண்டுக்காண்டு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. அதே சமயம், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி, ஆண்டுக்காண்டு 80 சதவீதம் சரிவடைந்து வருகிறது. இதற்கு இந்தோனேஷிய அரசின் வரி விதிப்பே காரணமாகும். எண்ணெய் சந்தையில், சூரியகாந்தி எண்ணெயின் பங்களிப்பு பெருகி வருகிறது. குறிப்பாக சோயா எண்ணெயின் விலையுடன் ஒப்பிடும்போது, சூரியகாந்தி எண்ணெய் விலை குறைவாக உள்ளது.இந்தியாவும் தற்போது, "கனோலா' மற்றும் "சப்பிளவர்' எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|