பதிவு செய்த நாள்
02 ஜூன்2012
01:04
பிளிப்கார்ட் நிறுவனம், இணையதளம் வாயிலான சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஆன்லைன் மூலமான புத்தக விற்பனையில் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இது, இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டு நிறுவனங்களை கவலையடையச் செய்துள்ளது.இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில், புத்தகங்கள் வாயிலான விற்பனையின் பங்களிப்பு (அளவின் அடிப்படையில்) 65 சதவீதம் என்றளவிலும், வருவாயில், இதன் பங்களிப்பு 40 சதவீதம் என்றளவிலும் உள்ளது.
எனவே, இதன் மூலம் ஏற்படும் இழப்பு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என ஆய்வு நிறுவனங்களும், துணிகர முதலீட்டு நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், இந்நிறுவனம் அதிகளவில் சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே, இழப்பைத் தடுக்கும் வகையில், இதனை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.வேகமாக வளர்ச்சி பெற்று வரும் பெங்களூரைச் சேர்ந்த இந்நிறுவனம், வரும் 2015ம் ஆண்டிற்குள், விற்பனையின் மூலம் 100 கோடி டாலர் வருவாய் (5,500 கோடி ரூபாய்) ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2009-10ம் நிதியாண்டில், 11.6 கோடி ரூபாயாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய், 2010-11ம் நிதியாண்டில், 50 கோடி ரூபாயாகவும், 2011-12ம் நிதியாண்டில், 500 கோடி ரூபாய் என்ற அளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், 20 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் வகையான பொருட்களை விற்பனை செய்கிறது. இதன் மதிப்பு, 2.50 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிறுவனம் நான்காவது கட்டமாக, ஆக்சல் பார்ட்னர்ஸ் மற்றும் டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 15 கோடி டாலர் நிதி திரட்டியது. இந்நிறுவனம், இதற்கு முன், மூன்று கட்டங்களில் 3.10 கோடி டாலர் அளவிற்கு நிதி திரட்டிக் கொண்டது. இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு, 85 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|