பதிவு செய்த நாள்
09 ஜூன்2012
01:20
திருப்பூர்:திருப்பூரில், பின்னலாடை நூலிழை தேக்கம் அடைந்துள்ளதால், அவற்றை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் நிலைக்கு நூற்பாலைகள் தள்ளப்பட்டுள்ளன.சாயத்தொழில் பிரச்னையாலும், மின்வெட்டு காரணமாகவும், வழக்கமான அளவுக்கு பின்னலாடை உற்பத்தி நடப்பதில்லை. இதனால், பருத்தி பின்னலாடை நூலிழை பயன்பாடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், நூலிழை விலை உயர்ந்திருந்தது. தற்போது, தேவை குறைந்திருப்பதால், இதன் விலை சரிவடைந்துள்ளது.இந்நிலையில், வழக்கமான விற்பனை நடக்காமல், நூலிழைகள் தேக்கம் அடைந்துள்ளன. மின் வெட்டால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மாதக் கடைசியில் விலை குறையலாம் என எண்ணி, பனியன் உற்பத்தியாளர்கள் கொள்முதலை குறைத்திருந்தனர். ஆனால், நூலிழை விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அதே விலை தொடரும் என நூற்பாலைகள் அறிவித்தன.அதன்படி, பருத்தி பின்னலாடை நூலிழை விலை, 20ம் நம்பர் கிலோ 188 ரூபாய்; 25ம் நம்பர் 197; 30ம் நம்பர் 208; 34ம் நம்பர் 219; 40ம் நம்பர் 226 ரூபாய் என்ற அளவில் உள்ளன.பருத்தி பின்னலாடை நூலிழை தேக்கத்தை தவிர்க்கும் வகையில், வாடிக்கையாளர்களின் கொள்முதலுக்கு ஏற்ப, கிலோவுக்கு ஏழு ரூபாய் வரை, விலையைக் குறைத்து வழங்க, நூற்பாலைகள் முடிவு செய்துள்ளன. அதிக கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கப்படுகிறது.தற்போதைய சூழலில், நூலிழை விலை, கிலோவுக்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை குறைக்கப்பட வேண்டும். மாறாக, ஐந்து முதல் ஏழு ரூபாய் வரை தள்ளுபடி விலையில் விற்க நூற்பாலைகள் முடிவு செய்துள்ளதாக, பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|