பதிவு செய்த நாள்
09 ஜூன்2012
10:07
புதுடில்லி: பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, "டீசல், சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை, இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பொது மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து, கடந்த மாதம் 24ம் தேதி, பெட்ரோல் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு, லிட்டருக்கு 7.54 ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் "பந்த்'தும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெட்ரோல் விலை, லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
டீசல் விலை: இந்நிலையில், டீசல், காஸ் மற்றும் மண்ணெண்ணெயை மானிய விலைக்கு விற்பனை செய்வதால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, தினமும், 475 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு லிட்டர் டீசலுக்கு 14 ரூபாயும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 32 ரூபாயும், காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 396 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதால், இவற்றின் விலைகளை கணிசமாக அதிகரித்தால் மட்டுமே, தாக்குப்பிடிக்க முடியும் என, அந்த நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, டீசல், சமையல் காஸ் மற்றும் கெரசின் விலை உயர்வு குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, பேச்சு எழுந்தது.
இப்போது இல்லை: இதுகுறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நேற்று கூறியதாவது: டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. அது பற்றி தற்போது சிந்திக்கவில்லை. மேலும், விலையை மாற்றி அமைப்பதற்காக, மத்திய அமைச்சரவையின் உயர்மட்டக் குழு கூடும் தேதியும், இன்னும் முடிவு செய்யப்படவில்லை. டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிப்பது குறித்தும் டீசல் கார்களுக்கு, ஒரே கட்ட வரியாக, 80 ஆயிரம் ரூபாய் வரி நிர்ணயிக்கும் திட்டம் குறித்தும் பரிசீலிக்கவில்லை. இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறினார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை அடுத்து, டீசல், சமையல் காஸ் மற்றும் கெரசின் விலைகள் இப்போதைக்கு உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்பதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தான், டீசல் விலையை உயர்த்துவதற்கு தயங்குவதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|