பதிவு செய்த நாள்
15 ஜூன்2012
01:03
புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்து வருவதற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரிப்பும் முக்கிய காரணம் என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் எஸ்.ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.
ஏற்றுமதி நாடுகள் : வியன்னாவில், சர்வதேச எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் சரிவு நிலைக்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன என்றாலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரிப்பும், நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2011-12ம் ஆண்டில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, முந்தைய ஆண்டை விட, 40 சதவீதம் அதிகரித்து, 14 ஆயிரம் கோடி டாலராக
அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நேரத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பின் சரிவு நிலையும், இறக்குமதி செலவினத்தை உயர்த்தி விடுகிறது. கச்சா எண்ணெயின் விலை, 10 டாலர் அதிகரிக்கும் நிலையில், அது, வளர்ச்சிகண்டு வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில், 1.5 சதவீத சரிவு நிலைக்கு வழி வகுத்து விடுகிறது.
பொருளாதார வளர்ச்சி : கடந்த இரண்டு ஆண்டுகள் வரையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. இது, கடந்த 2011-12ம் நிதியாண்டின், 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் இறக்குமதியில், இந்தியா, நான்காவது மிகப்பெரிய நாடாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டுகளுக்கு இடையில், கச்சா எண்ணெய் விலை, சராசரியாக, ஒரு பீப்பாய்க்கு, 27 டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்த அளவில், இந்தியாவின் இறக்குமதி செலவினம், 10 ஆயிரம் கோடி டாலரிலிருந்து, 14 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயரும் போது, உள்நாட்டில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. அது, நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்க செய்து விடுகிறது.
வர்த்தக பற்றாக்குறை : இதனால், மூலப்பொருட்கள் விலை உயர்வதுடன், பட்ஜெட் பற்றாக்குறையையும் உயர்த்தி விடுகிறது. ஒட்டுமொத்த அளவில், பொருளாதார வளர்ச்சியும் தேக்கமடைந்து விடுகிறது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரிப்பால் வர்த்தக பற்றாக்குறையும் உயர்ந்து விடுகிறது. இவ்வாறு ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|