பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
12:21
மதுரை: மூலப்பொருட்களின் விலை உயர்வு, அரசின் குறைந்த மானியம் போன்ற காரணங்களால் உரவிலை, பெட்ரோல் விலையை போல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் விலை உயர்வு, அமெரிக்கா டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு போன்ற காரணங்களால், உரவிலை அதிகரித்து வருகிறது. முன்பு, விலை உயர்ந்தாலும், அதற்கேற்ப மத்திய அரசு மானியம் அளித்து, விலை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தற்போது, குறிப்பிட்ட அளவு மானியம் மட்டும் தரும் மத்திய அரசு, விலை உயர்வுக்கு ஏற்ப, உரவிலையை உயர்த்த உரம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு "பச்சைக்கொடி' காட்டியது. இதனால் 2009ல் ரூ.486க்கு விற்ற ஐம்பது கிலோ டிஏபி உரம், 2010ல் ரூ.507, 2011ல் ரூ.643, தற்போது ரூ.1250க்கும், கலப்பு உரம் ரூ.316லிருந்து முறையே ரூ.347, ரூ.476, ரூ.857க்கும், பொட்டாஷ் உரம் ரூ.206லிருந்து முறையே ரூ.219, ரூ.299, ரூ.840க்கும் விற்கப்படுகிறது. மதுரையில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 20 20 காம்பளக்ஸ் உரம் ரூ.545லிருந்து ரூ.858க்கும், சூப்பர் பாஸ்பேட் ரூ.220லிருந்து ரூ.362க்கும் விற்கப்படுகிறது. யூரியா மட்டும் ரூ.268 என்பதில் மாற்றமில்லை. மற்ற உரவிலையை காட்டிலும் யூரியா விலை குறைவாக இருப்பதால், அதை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் அப்பாஸ் கூறியதாவது : முன்பு, ஆடு, மாடு வளர்த்து இயற்கை உரத்திற்கு வழிவகுக்கப்பட்டது. ஆனால், தற்போது அதை பராமரிப்பது சிரமம் என்பதால், ரசாயன உரங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. உரவிலை உயர்வுக்கு மத்திய அரசின் இறக்குமதி கொள்கை, உரத்தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடாததே காரணம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாலும் தொடர்ந்து விலை அதிகரிக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு மானியம் கொடுத்து விவசாயிகளுக்கு உரத்தை விற்பதற்கு பதில், அரசே நேரடியாக விற்க வேண்டும். உரவிலையை உயர்த்தும் முன், விவசாயிகளிடம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் விவசாயிகளின் நலனை கருதுவதில்லை. கேரளாவில் குறைந்த விலையில் உரம் கிடைக்க, விவசாயிகளுக்கு தனி கார்டு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மானிய விலையில் உரம் தந்தாலும், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறுகையில், ""ரசாயன உரத்தை கைவிட்டு, விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறவேண்டும். செலவும், பராமரிப்பும் குறைவு. நிலம் மலட்டுத்தன்மையற்றதாக இருக்கும். விவசாயிகளும் கடன்படமாட்டார்கள்,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|