பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
00:43
பட்டுச் சேலை விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள,'கனவு நனவு' திட்டத்தில், ஆறு மாதங்களுக்குள், ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து பட்டு, பருத்தி ஆடைகளை, 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.கைத்தறி துணிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள வரவேற்பை பயன்படுத்தி, இவ்வாண்டு வெளிநாட்டு ஏற்றுமதி மூலம், ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கும், கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டுள்ளது.
கனவு நனவு திட்டம்:கோ-ஆப்டெக்ஸ், சமீபத்தில் அறிமுகப்படுத்திய, 'கனவு நனவு' திட்டத்தில், பட்டுச்சேலைகளை மாத தவணையில் வாங்கலாம். 100 ரூபாயிலிருந்து எவ்வளவு தொகை வேண்டுமானாலும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செலுத்தலாம். இத்திட்டத்தில், ஒன்பது மாதங்கள் தவணை தொகை கட்டியவர்களுக்கு, பத்தாவது மாத தொகையினை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தும். பத்தாவது மாதம் முடிவில், சேமிப்பில் வாடிக்கையாளர்கள், 58 சதவீதம் கூடுதல் பலன் பெறலாம்.
அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைங்களில் இத்திட்டத்தில் சேர்ந்து, இந்தியாவில் எந்தவொரு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திலும், தேவையான துணி ரகங்களை பெற்றுக்கொள்ளவும், இத்திட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பருத்தி ஆடைகள்:இத்திட்டம் துவங்கப்பட்ட, 18 நாட்களில், 8,337 பேர் சேர்ந்துள்னர். ஆறு மாதங்களில், இத்திட்டத்தில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து, இதன் மூலம், பட்டு மற்றும் பருத்தி ஆடைகளின் விற்பனையை, 50 கோடி ரூபாய் வரை உயர்த்துவதற்கு கோ-ஆப்டெக்ஸ் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி:சமையலறை துணி வகைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள்,தோள் பைகளுக்கு ஜெர்மனி,நெதர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இத்தாலி நாடுகளில் வரவேற்பு உள்ளது. இந்நாடுகளுக்கு, கடந்தாண்டு இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு, ஐந்து கோடி ரூபாய் வரை கைத்தறி துணிகள் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியா முழுவதிலும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனங்களின் மூலம் கடந்த ஆண்டு பட்டு மற்றும் பருத்தி துணி வகைகள், 217 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. நடப்பு ஆண்டு, இதை இருமடங்காக 434 கோடி ரூபாய் வரை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|