பதிவு செய்த நாள்
01 ஜூலை2012
02:40
நடப்பு வாரத்தில், பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் மிகவும் சிறப்பாக இருந்தது. கடந்த ஒரு சில மாதங்களாக, "சென்செக்ஸ்' 17,000 புள்ளிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று, ஒரே நாளில், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 439 புள்ளிகள் அதிகரித்து, ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியது.
நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து நன்கு இருக்கும் நிலையில், வரும் வார இறுதிக்குள் "சென்செக்ஸ்' 18,000 புள்ளிகளை எட்டி விடும் என எதிர்பார்க்கலாம்.
அன்னிய முதலீடு:உலகின் பல்வேறு நாடுகளில், பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததுடன், அன்னிய நிதி நிறுவனங்கள் அன்றைய தினம், 3,047 கோடி ரூபாய் மதிப்பிற்கு, முதலீடு மேற்கொண்டதும், பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது. இந்த முதலீடு, பங்கு வர்த்தகத்திற்கு மட்டுமின்றி, கடந்த ஒரு சில மாதங்களாக, தொடர்ந்து சரிவடைந்து வந்த ரூபாயின் வெளிமதிப்பு உயர்வதற்கும் வழிவகுத்தது.
கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அந்நாடுகளின் கூட்டமைப்பு 18 முறை கூடி முயற்சி மேற்கொண்டது. ஆனால், இக்கூட்டங்களில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நடப்பு வாரத்தில் கூட்டப்பட்ட 19வது கூட்டத்தில், கடன் பிரச்னையில் சிக்கி தவிக்கும் நாடுகளுக்கு, முழு அளவில் நிதி உதவி வழங்கும் வகையில் முடிவெடுக்கப்பட்டது. இது, வெள்ளியன்று, ஐரோப்பிய பங்குச் சந்தைகளை உயரே கொண்டு செல்ல உதவியது.
வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 439 புள்ளிகள் அதிகரித்து, 17,430 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 130 புள்ளிகள் உயர்ந்து, 5,279 புள்ளிகளிலும் நிலை கொண்டன. நடப்பு வாரத்தில் மட்டும், "சென்செக்ஸ்' 548 புள்ளிகள் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு;கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பு காலாண்டில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு மிகவும் சரிவடைந்து போனது. ஆனால், வெள்ளியன்று, ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. இது, பலதரப்பு மக்களுக்கும் உதவும். குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நேரத்தில், ரூபாயின் வெளிமதிப்பு சரிவு அதிக இடர்பாட்டை ஏற்படுத்தும் அம்சமாக இருந்தது.
இந்நிலையில், ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயரும் நிலையில், அது கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செலவினத்தை குறைக்க வழிவகுக்கும். இதனால், நாட்டின் பணவீக்கம் குறையும் என்பதுடன் அது, பங்குச் சந்தையின் முன்னேற்றத்திற்கும் உதவி புரியும்.
தொகுப்பில் இருக்க வேண்டியவை:பங்குச் சந்தை மெல்ல மெல்ல உயர்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. நன்கு செயல்படும் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் சிறப்பாக செயல்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
குறிப்பாக, டாட்டா பவர், மணப்புரம் பைனான்ஸ், ஸ்டிரைட்ஸ் அக்ரோ லேப்ஸ், என்.ஐ.ஐ.டி., டைம் டெக்னோ பிளாஸ்ட், பிரதீபா இண்டஸ்ட்ரீஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆகியவற்றின் பங்குகளில், நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
புதிய வெளியீடு;பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' யிடம் அனுமதி பெற்றும், பல நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை மேற்கொள்ளாமல் உள்ளன.
இந்நிலையில், பொறியியல் சாதனங்கள் கொள்முதல் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், வி.கே.எஸ். புராஜக்ட்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்ளும் வகையில், மூலதனச் சந்தையில் களமிறங்கியுள்ளது.
சென்ற வெள்ளியன்று (29ம் தேதி) துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு இம்மாதம் 4ம் தேதியுடன் (புதன்கிழமை) முடிவடைய உள்ளது. "புக் பில்டிங்' எனப்படும், ஏல அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பங்கு வெளியீட்டில், பங்கு ஒன்றின் விலை 55-60 ரூபாய் என்றளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 55 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
வங்கி டெபாசிட்;வங்கிகள் திரட்டும் டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. அதேசமயம், ஒரு சில வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை மேலும் கூட்டிக் கொண்டுதான் உள்ளன. இது, முதலீட்டாளர்களுக்கு நன்மை பயப்பதாக உள்ளது என்றாலும், வங்கிகளிடம், இன்னும் போதிய அளவிற்கு பணப் புழக்கம் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
வரும் வாரம் எப்படி?அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம், சிறப்பாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. கச்சா எண்ணெய், மற்றும் பெட்ரோல் விலை குறைந்துள்ளதும், ஐரோப்பிய பிரச்னைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையும் வரும் வாரத்தில், பங்குச் சந்தையை மேலும் முன்னேற்றம் அடையச் செய்ய வாய்ப்புள்ளது.
இவை தவிர, ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்துள்ளதும், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தென்மேற்கு பருவ மழை, இது வரை, பெய்ய வேண்டிய அளவை விட, 17 சதவீதம் குறைவாக உள்ளது. ஜூலை மாதம், இரண்டாவது வாரத்திற்கு பிறகு, நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான, நிதி நிலை அறிக்கையை வெளியிடத் துவங்கும். அதுவும், பங்கு வர்த்தகத்தின் போக்கை நிர்ணயிக்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|