பதிவு செய்த நாள்
08 ஜூலை2012
01:42
புதுடில்லி:கடந்த மூன்று ஆண்டுகளாக, மந்தகதியில் உள்ள பரஸ்பர நிதி துறையை ஊக்குவிக்கும் முயற்சியில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தீவிரமாக ஈடுபட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், பரஸ்பர நிதி துறையில் மேற்கொள்ளப்பட்ட, நிகர முதலீடு, 122 கோடி ரூபாய் என்ற அளவிற்கு, மிகவும் குறைவாக உள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 13 ஆயிரத்து 139 கோடி ரூபாய் என்ற அளவில், பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது.
சர்வதேச நெருக்கடி:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பங்குச் சந்தை வீழ்ச்சி, பணவீக்க உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பரஸ்பர நிதி துறையின் வளர்ச்சி, கடந்த நிதி ஆண்டில், குறிப்பிடும்படி இல்லை.மேலும், பரஸ்பர நிதி திட்ட முதலீடுகளுக்கான, நுழைவுக் கட்டணம், கடந்த 2009ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டதில் இருந்து, இத்துறையின் வளர்ச்சி சுணக்கம் கண்டுள்ளது.
பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீடு மேற்கொள்ளும்போது, நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இத்தொகை, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்களை சேர்க்கும் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதலீட்டாளர்களின் நலன் கருதி, கடந்த 2009ம் ஆண்டு, பரஸ்பர நிதி திட்டங்களில் சேர்வதற்கான நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.இந்த கட்டணம் ரத்து செய்யப்பட்டதால், பரஸ்பர நிதியங்கள், முகவர்களுக்கு வழங்கி வந்த, 2.25 சதவீத தரகு கட்டணத்தை நிறுத்தி விட்டன.
இதையடுத்து முகவர்களின் வருவாய் குறைந்தது. அவர்களுக்கு, புதிய பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் குறைந்தது. இது, பரஸ்பர நிதி துறைக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால், பரஸ்பர நிதி திட்டங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என, பரஸ்பர நிதி நிறுவனங்கள் "செபி' -யிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
கோரிக்கை: இதனிடையே, பிரணாப் முகர்ஜியின் ராஜினாமாவை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் பொறுப்பை கவனித்து வரும் பிரதமர் மன்மோகன்சிங், பரஸ்பர நிதி துறை மற்றும் காப்பீட்டு துறையில் காணப்படும் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.இதையடுத்து, பரஸ்பர நிதி துறை பிரதிநிதிகளுடன், நிதியமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பரஸ்பர நிதி திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட செலவு வரம்பை, 2.25 சதவீதத்தில் இருந்து 2.50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, பரஸ்பர நிதியங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.மேலும், ஓய்வூதிய பரஸ்பர நிதி திட்டங்களுக்கு வரி விலக்கு சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பரஸ்பர நிதி திட்டத்தில் இருந்து வெளியேறுவதற்காக வசூலிக்கப்படும் கட்டணம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் திட்டங்களுடன் இணைக்கப்பட்டு, நிகர சொத்து மதிப்புடன் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திட்டத்தின் மொத்த செலவினத்தில்,சேவை வரியை சேர்க்காமல், முதலீட்டாளர் மீது சுமத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.
ஆலோசனை:இந்த கோரிக்கைகள் குறித்து, "செபி'யின் பரஸ்பர நிதி ஆலோசனை குழு, வரும் 17ம் தேதி கூடி ஆலோசனை நடத்த உள்ளது. அப்போது, பரஸ்பர நிதியங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து "செபி' உறுப்பினர் ராஜீவ் அகர்வால் கூறும்போது," பரஸ்பர நிதி துறையை சீரமைக்கவும், சிறிய நகரங்களிலும் சேவையை விரிவுபடுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
புதிய பங்கு வெளியீடுகள்:"செபி'யின் நடவடிக்கைகளில் ஒன்றாக, 10கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான புதிய பங்கு வெளியீடுகளை, மின்னணு முறையில்தான் மேற்கொள்ள வேண்டும் என்பதுவும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் புதிய பங்குவெளியீடுகளில் எண்ணற்ற காகித ஆவணங்களை பூர்த்தி செய்யும் சிரமம் குறையும்."செபி' விரைவில் அறிவிக்க உள்ள விதிமுறைகளால், பரஸ்பர நிதி துறை, புத்துணர்வு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இதனால், பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளர்களுக்கு சற்று கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், பங்குச் சந்தை சூடு பிடிக்கும்பட்சத்தில், இந்த செலவினம் பெரிய அளவில் முதலீட்டாளர்களை பாதிக்காது என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|