பதிவு செய்த நாள்
16 ஆக2012
02:27
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் சரக்கு கையாண்டது குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி குறைந்ததையடுத்து, முக்கிய துறைமுகங்களின் செயல்பாடுகள் மந்தமடைந்துள்ளன. இந்த நிலையிலும், ஒரு சில முக்கிய துறைமுகங்கள் சரக்கு கையாண்டதில் வளர்ச்சி கண்டுள்ளன. மதிப்பீட்டு காலத்தில், இத்துறைமுகங்கள், 18.37 கோடி டன் சரக்கு கையாண்டுள்ளன. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் கையாண்டதை (19.31 கோடி டன்) விட, 4.89 சதவீதம் குறைவு என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா:அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்நாடுகளை சார்ந்துள்ள இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது. நாட்டின் இறக்குமதியும் சுணக்கம் கண்டுள்ளதால், முக்கிய துறைமுகங்களில், கையாளப்படும் சரக்கின் அளவு குறைந்து போயுள்ளது.கணக்கீட்டு காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தை விட, 5.3 சதவீதம் குறைந்து, 9,760 கோடி டாலராகவும், இறக்குமதி, 6.47 சதவீதம் சரிவடைந்து, 15,320 கோடி டாலராகவும் சரிவடைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், அனல் மின் நிலையங்களுக்காக, துறைமுகங்கள் நிலக்கரியை கையாண்டது, 4.44 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்ற ஏப்., - ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மும்பை ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (ஜே.என்.போர்ட்), கொச்சி மற்றும் கண்ட்லா துறைமுகங்கள், சிறப்பான அளவில் சரக்கை கையாண்டுள்ளன.
அதே சமயம், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரும்பாலான துறைமுகங்கள், இரும்புத்தாது, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை அதிகம் சார்ந்துள்ளதால், அவை கையாளும் சரக்கின் அளவு குறைந்து போயுள்ளது.நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாத காலத்தில், கோல்கட்டா துறைமுகம் (ஹால்டியா உட்பட), 1.35 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், கையாண்ட அளவை விட(1.58 கோடி டன்),14.24 சதவீதம் குறைவாகும்.மதிப்பீட்டு காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 18.52 சதவீதம் குறைந்து,1.99 கோடி டன்னி லிருந்து, 1.62 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு,14.87 சதவீதம் குறைந்து, 2.42 கோடி டன்னிலிருந்து, 2 கோடி டன்னாக சரிவடைந்து போயுள்ளது.
எண்ணூர் துறைமுகம்:அதேசமயம், தமிழகத்தை சேர்ந்த எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 28 சதவீதம் வளர்ச்சி கண்டு, 42.36 லட்சம் டன்னிலிருந்து, 54.22 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 0.78 சதவீதம் உயர்ந்து, 94.62 லட்சம் டன்னிலிருந்து, 95.36 லட்சம் டன்னாக சற்று உயர்ந்துள்ளது.இருப்பினும், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 8.78 சதவீதம் குறைந்து, 2 கோடி டன்னிலிருந்து, 1.84 கோடி டன்னாக குறைந்து போயுள்ளது.கொச்சி துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 8.50 சதவீதம் உயர்ந்து, 63.79 லட்சம் டன்னிலிருந்து, 69.21 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
நியூ மங்களூர் துறைமுகம்:நியூ மங்களூர் துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 2.31 சதவீதம் குறைந்து, 1.15 கோடி டன்னி லிருந்து, 1.12 கோடி டன்னாகவும்,மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 22.01 சதவீதம் வீழ்ச்சிகண்டு,1.36 கோடி டன்னிலிருந்து,1.06 கோடி டன்னாகவும் குறைந்து போயுள்ளது.அதேசமயம், ஜவர்ஹலால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கின் அளவு, 2.90 சதவீதம் உயர்ந்து, 2.16 கோடி டன்னிலிருந்து, 2.22 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 3.54 சதவீதம் உயர்ந்து, 2.82 கோடி டன்னிலிருந்து, 2.92 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
போட்டி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 13.85 கோடி டன் என்றளவில் இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் கையாளப்பட்ட சரக்கை விட, 5.49 சதவீதம் குறைவாகும்.தற்போது, சரக்கு கையாளுவதில், பெரிய துறைமுகங்களுக்கு போட்டியாக, சிறிய துறைமுகங் கள் உருவெடுத்து வருகின்றன.இதனால், வரும் காலங்களில், இத்துறைமுகங்கள் கையாளும் சரக்கின் அளவு சிறப்பாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|