பதிவு செய்த நாள்
21 ஆக2012
23:45
- நமது நிருபர் -ரசாயன உரங்களின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தனியார் கடைகளில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு வியாபாரிகள் உரத்தை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.தழைச்சத்துநெல், மஞ்சள், வாழை போன்ற பயிர்களுக்கு, டீ.ஏ.பி., மற்றும் காம்ப்ளக்ஸ் உரத்தை, விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். பயிர்கள் செழித்து வளர, தழைச் சத்துக்காக யூரியா உரமும், மணிச் சத்துக்கு, பொட்டாஷ் உரத்தையும், பயன்படுத்துகின்றனர்.டீ.ஏ.பி., காம்ப்ளக்ஸ், யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்களை, அதிகளவில் விவசாயிகள் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு, கூட்டுறவு சங்கத்தின் மூலம் மானிய விலையில், யூரியா உரங்களை வழங்கி வருகிறது.இந்நிலையில், டீ.ஏ.பி., காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள், விலை உயர்ந்துள்ளதோடு, தனியார் உரக் கடைகளில், அத்தியாவசிய உரங்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்று வருவதாகவும், விலை பட்டியல் விவரங்களை, கடையில் வைப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.கூட்டுறவு சங்கம்இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:கூட்டுறவு சங்கத்தில், 50 கிலோ யூரியா உர மூட்டை, 266 ரூபாயும், பொட்டாஷ் உரம், 740 ரூபாயும், டீ.ஏ.பி., உரம், 890 ரூபாயும், 20:20 காம்ப்ளக்ஸ் உரம் மற்றும் 10:26 கலப்பு உரம், 700 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன.தனியார் கடைகளில், யூரியா மூட்டைக்கு, 300 ரூபாய் வரை அதிகரித்தும், பொட்டாஷ், 800 ரூபாய், டீ.ஏ.பி., 1,200 ரூபாய், காம்ப்ளக்ஸ் மற்றும் கலப்பு உரம், 1,000 ரூபாய் என, கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. டீ.ஏ.பி., உரம் விலை, 30 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.கூட்டுறவு சங்கங்களில் விலை குறைவாக இருந்தாலும், அங்கு போதுமான உரம் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், தனியார் கடைகளை நாட வேண்டிய அவசியம், விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. தனியார் கடைகளில், கூடுதல் விலைக்கு, உரம் விற்பனை செய்வதால், விலை பட்டியல் வைப்பதில்லை.பருவ மழை துவங்கியதும், நடவுப் பணி துவங்கும் என்பதால், உரங்களை குடோன்களில், அதிகளவில் பதுக்கி வைத்துள்ளனர். உரத்துக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை உயர்த்தி வருகின்றனர். வேளாண்துறை அதிகாரிகளிடம், புகார் செய்தாலும், உர விலை மற்றும் பதுக்கலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இறக்குமதிகூட்டுறவு சங்க உரம் விற்பனை பிரிவு மற்றும் வேளாண் அலுவலர்களிடம் கேட்டபோது, "ரசாயன உரங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால், தேவைக்கு ஏற்ப அனைத்து மாவட்டங்களுக்கும், உரங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. கூட்டுறவு சங்கத்தில், உரம் விலை உயர்த்தப்படவில்லை; தனியார் கடைகளில், உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்கினாலோ, கடும் நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|