பதிவு செய்த நாள்
12 செப்2012
00:33
பருவமழை குறித்த மதிப்பீடு மாறியதால்...வேளாண் முன்பேர சந்தைகளில் சுணக்க நிலை
சென்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், வேளாண் விளைபொருட்கள் முன்பேர சந்தையின் அன்றாட விற்றுமுதல் சரிவடைந்துள்ளது. பருவ மழை குறைந்துள்ளதால், நடப்பு வேளாண் பருவத்தில், வேளாண் உற்பத்தி குறையும் என்ற மதிப்பீட்டால், முன்பேர வர்த்தக சந்தைகளை கட்டுப்படுத்தும், பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,), புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், முன்பேர வர்த்தகம் குறைந்து, அன்றாட விற்றுமுதல் சரிவடைய வழிவகுத்துள்ளது.
கோதுமை:சென்ற ஜூலை மாதம், என்.சி.டீ.ஈ.எக்ஸ்., முன்பேர சந்தையின் அன்றாட சராசரி விற்றுமுதல், 8,173 கோடி ரூபாயாக இருந்தது. இது, ஆகஸ்ட் மாதம் 18.4 சதவீதம் சரிவடைந்து, 6,673 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அது போன்று, இதே மாதங்களில், ஏ.சி.இ., முன்பேர சந்தையில், வேளாண் விளைபொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்தின், அன்றாட சராசரி விற்றுமுதல் 14.3 சதவீதம் குறைந்து, 935 கோடி ரூபாயில் இருந்து, 801 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எப்.எம்.சி., அமைப்பு, முன்பேர சந்தையில், கோதுமை, ஆமணக்கு, கொண்டைக் கடலை, உருளைக் கிழங்கு, சோயா, சோயா எண்ணெய், சர்க்கரை, கடுகு ஆகியவற்றுக்கான வரம்புத் தொகையை உயர்த்தியுள்ளது. இதனால், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. மேலும், இதர பிரிவினரின் முதலீடும் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, முன்பேர சந்தைகளில் வேளாண் விளைபொருட்களின் அன்றாட வர்த்தக விற்றுமுதல் வீழ்ச்சி கண்டுள்ளது.
கட்டுப்பாடு:அதே சமயம், சென்ற வாரம் உருளைக் கிழங்கு மீதான சிறப்பு முதலீட்டு வரம்பு குறைக்கப்பட்டது. பருத்தி புண்ணாக்கு மற்றும் பார்லிக்கான முதலீட்டு வரம்பு மீதான கட்டுப்பாடும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "கடந்த இரண்டு மாதங்களாக, எப்.எம்.சி., எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால், வேளாண் பொருட்கள் மீதான வர்த்தகம் நிலையில்லாமல் உள்ளது.
எனினும், சென்ற ஜூலையில், வேளாண் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்ததால், முன்பேர சந்தையின் விற்றுமுதல் அதிகரித்துள்ளது' என்று தெரிவித்தார்.பருவமழை பற்றாக்குறையால், வேளாண் பொருட்களின் உற்பத்தி குறையும் என்ற கணிப்பே, முன்பேர சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் அடையக் காரணம் என, அவர் மேலும் கூறினார்.
விலை உயர்வு:ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் இணை இயக்குனர் (விளைபொருள் - கரன்சி) நவீன் மாத்தூர் கூறும்போது,"ஜூலையில், விளைபொருட்களின் விலை உயர்வால், வேளாண் முன்பேர சந்தைகளில் வர்த்தகம் அதிகரித்திருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம், பல்வேறு பயிர் பகுதிகளில், சிறப்பான அளவிற்கு மழை பெய்ததால், உற்பத்தி உயர்ந்து, விளைபொருட்களின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பாலும், முன்பேர சந்தைகளில் முதலீட்டாளர்களின் பங்கேற்பு குறைந்தது' என்று தெரிவித்தார்.
சென்ற ஜூலை மாதம், அனைத்து முன்பேர சந்தைகளின், ஒட்டு மொத்த விற்றுமுதல் 57,510 கோடி ரூபாயாக இருந்தது. இது, ஆகஸ்ட் மாதம், 1 சதவீதம் சரிவடைந்து, 57,053 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
தொடரும் மந்தநிலை:மேற்கண்ட இரண்டு மாதங்கள் மட்டுமின்றி, நடப்பு செப்டம்பர் மாத தொடக்கத்திலும், வேளாண் விளைபொருள் முன்பேர சந்தைகளில், அன்றாட விற்றுமுதல் குறைந்துள்ளது என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக, நடப்பு மாதம், 1ம் தேதி முதல், 7ம் தேதி வரையிலான காலத்தில், என்.சி.டீ.இ.எக்ஸ்., முன்பேர சந்தையின் அன்றாட சராசரி விற்றுமுதல் 6,034 கோடி ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது. அது போன்று, இதே காலத்தில், ஏ.சி.இ., முன்பேர சந்தையின் அன்றாட சராசரி விற்றுமுதல் 735 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|