பதிவு செய்த நாள்
28 செப்2012
00:18
மத்திய அரசு, 2012-13ம் கரீப் பருவத்தில் (ஜூலை-அக்.,), பொது வினியோக திட்டத்திற்காக 4 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்டதை (3.50 கோடி டன்) விட, 14 சதவீதம் அதிகமாகும்.
உற்பத்தி:மத்திய அரசின் உணவு தானிய தொகுப்பிற்கான நெல் கொள்முதல், வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கும். இப்பணியை,தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (நாபெட்) துணையுடன், இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.,) மேற்கொள்ளும்.மத்திய வேளாண் அமைச்சகம், நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான நெல் உற்பத்தி குறையும் என, மதிப்பிட்டுள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக, நெல் கொள்முதல் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறுகையில்," நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் கொள்முதல் உயர வாய்ப்புள்ளது' என, தெரிவித்தனர்.தற்போது, ஒரு குவிண்டால், பொது மற்றும் உயர் ரக நெல்லுக்கான கொள்முதல் விலை, 1,250 ரூபாயில் இருந்து 1,280 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை, சென்ற ஆண்டில், 1,080 ரூபாய் மற்றும் 1,110 ரூபாயாக இருந்தது.
முதல் மதிப்பீடு:மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதல் மதிப்பீட்டில், நடப்பு நிதியாண்டில், நெல் உற்பத்தி 8.55 கோடி டன்னாக குறையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டில், சாதனை அளவாக, 9.15 கோடி டன்னாக இருந்தது.அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, சந்தை விலை குறைய வாய்ப்புள்ளது. அவ்வாறு குறையும்பட்சத்தில், தேவைப்படும் மானியம் தொடர்பான முடிவுகளை அரசு எடுக்கும் என, வேளாண் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய வேளாண் அமைச்சகம், பல வகை உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, 30 -40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.கரீப் பருவ நெல் கொள்முதல், பஞ்சாப், ஹரியானா போன்ற வட மாநிலங்களில் இருந்து முதன் முதலாக துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "பரவலான கொள்முதல் திட்டம் (டீ.பி.எஸ்)' அறிமுகமானதை தொடர்ந்து, "நாபெட்', அக்டோபர் கடைசியில் பீகார், ஒடிசா,மேற்குவங்கம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் நெல்லை கொள்முதல் செய்யத் துவங்கும்.
மாநில உரிமை:"தற்போது, வட மாநிலங்களில் இருந்து நெல் வரத் துவங்கியுள்ளது. வரும் அக்டோபரில், கிழக்கு மாநிலங்களில் இருந்து வரத் துவங்கும்' என, அதிகாரிகள் மேலும் கூறினர்."டீ.பி.எஸ்'-ன் கீழ், ஒவ்வொரு மாநிலமும், அவற்றின் சார்பாக உணவு தானியங்களை கொள்முதல் செய்ய, முகமை அமைப்புகளை நியமிக்கலாம்.
எனினும், இவை, மத்திய அரசின் பொது வினியோக திட்டம் மற்றும் மத்திய உணவு தானிய தொகுப்பின் ஓர் அங்கமாகவே செயல்படும்.
உணவு தானிய கொள்முதலில் ஈடுபடும், மாநில முகமை அமைப்புகளின் பணிகளில், மத்திய அரசின் "நாபெட்' மற்றும் "எப்.சி.ஐ.,' ஆகியவற்றின் பிராந்திய அலுவலகங்களின் பங்களிப்பும் இருக்கும்."டீ.பி.எஸ்'-ல், ஒரு மாநிலம் கொள்முதல் செய்யும் உணவு தானியங்களை, அந்த மாநிலமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது சிறப்பம்சமாகும். இதற்கு முன்பு, வடமாநிலங்களுக்காக மட்டுமே உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அந்த மாநிலங்களுக்கும், இதர மாநிலங்களின் பொது வினியோக திட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். இத்தகைய நடைமுறையில், சரக்கு போக்குவரத்தின் போது, உணவு தானியங்கள் வீணாவதை தடுக்கும் நோக்கில் "டீ.பி.எஸ்' அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், மாநில அரசுகளும் ஆர்வத்துடன் இணைந்துள்ளன.
எண்ணெய் வித்துக்கள்:இதனிடையே, "நாபெட்', மகாராஷ்டிராவில் இருந்து எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளது. எப்.சி.ஐ., பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் கூட்டுடன், நடப்பு ஆண்டில் கூடுதலாக 5-6 டன் உணவு தானியங்களை சேமித்து வைக்கக் கூடிய கிடங்குகளை ஏற்படுத்தியுள்ளது.சென்ற 2010-11ம் கரீப் சந்தைப்படுத்தும் பருவத்தில், எப்.சி.ஐ., இதர அரசு முகமை அமைப்புகளுடன் இணைந்து, 3.40 கோடி டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது.
இதில், மிக அதிக அளவாக, ஆந்திர மாநிலத்தில் இருந்து 96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அடுத்த இடங்களில், பஞ்சாப் (86 லட்சம் டன்), சத்தீஸ்கர் (37 லட்சம் டன்), உத்தர பிரதேசம் (25 லட்சம் டன்), ஒடிசா (24 லட்சம் டன்), ஹரியானா (16 லட்சம் டன்), தமிழ்நாடு (15 லட்சம் டன்) மற்றும் மேற்கு வங்கம் (13 லட்சம் டன்) ஆகியவை உள்ளன.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|