பதிவு செய்த நாள்
01 அக்2012
05:39
வங்கிகள், சேமிப்பு கணக்கிற்கு வழங்கும் வட்டியை குறைக்க திட்டமிட்டுள்ளன. இதனால், வங்கி வாடிக்கையாளர்களின் வட்டி வருவாய் குறையும்.ரிசர்வ் வங்கி, சென்ற 2011ம் ஆண்டு, வங்கிகளின் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியது. கோட்டக் மகிந்திரா:இதையடுத்து, கோட்டக் மகிந்திரா, யெஸ் பேங்க் உள்ளிட்ட தனியார் துறை வங்கிகள், சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தின.யெஸ் பேங்க், சேமிப்பு கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கான வட்டியை, 7 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு குறைவான தொகைக்கு, 6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து, கோட்டக் மகிந்திரா பேங்க், ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு, 6 சதவீத வட்டியும், அதற்கு குறைவான தொகைக்கு, 5.5 சதவீத வட்டியும் வழங்குவதாக அறிவித்தது.
இந்தஸ் இந்த் பேங்க், அதன் சேமிப்பு கணக்கிற்கு, இதே அளவிலான வட்டி விகிதத்தை நிர்ணயித்தது. ரத்னாகர் பேங்க், சேமிப்பு கணக்கிற்கான வட்டியை 5.5 சதவீதமாக உயர்த்தியது. பர்ஸ்ட் ரேன்டு பேங்க், சேமிப்பு கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு, 7.25 சதவீத வட்டியும், அதற்கு குறைவான தொகைக்கு 6.25 சதவீத வட்டியும் வழங்குவதாக அறிவித்தது.இத்தகைய வட்டி உயர்வு காரணமாக, இவ்வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தது. ஏராளமான புதிய வாடிக்கையாளர்களை இவ்வங்கிகள் ஈர்த்தன.
அதே சமயம், பொதுத்துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், எச்.டீ.எப்.சி. பேங்க் உள்ளிட்டவை, சேமிப்பு கணக்கிற்கு குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட, 4 சதவீத வட்டியை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அண்மையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 4.5 சதவீதமாக நிர்ணயித்தது. இதனால், வங்கித் துறையில், கூடுதலாக, 17 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 10 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதமாக குறைத்தது. இதையடுத்து, இவ்வங்கியின் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது.
எச்.டீ.எப்.சி.வங்கி:இவ்வங்கியை தொடர்ந்து, எச்.டீ.எப்.சி.வங்கியும், அதன் அடிப்படை வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், இவ்வங்கியின் அனைத்து வகை கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.அதே சமயம், இவ்வங்கிகளின் டெபாசிட் - கடன் ஆகியவற்றின் அடிப்படையிலான நிகர வட்டி வரம்பு குறையும். இதை கருத்தில் கொண்டு, பல வங்கிகள், அவற்றின் குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டியை குறைத்துள்ளன.இதையடுத்து, தற்போது சேமிப்பு கணக்கிற்கான வட்டியை குறைப்பது குறித்தும், பல வங்கிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து எச்.டீ.எப்.சி. வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்ய பூரி கூறியதாவது:வங்கிகள், சேமிப்பு கணக்கிற்கான வட்டியை குறைக்குமா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஒட்டுமொத்தத்தில், வட்டி விகிதம் குறையும் போது, சேமிப்பு கணக்கிற்கான வட்டியை மட்டும் குறைக்காமல் இருந்தால், அது வங்கியின் நிகர வட்டி வருவாயை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், ஒரு சில தனியார் துறை வங்கிகள், நாட்டின் பொருளாதார சூழலுக்கேற்ப, வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வது குறித்து, முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
யெஸ் பேங்க்:இது குறித்து யெஸ் பேங்க் குழுமத் தலைவர் (நிதிச் சந்தை) ரஜத் மோங்கா கூறியதாவது:சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள் உடனடியாக குறையும் என்று கூறமுடியாது. வட்டி விகித குறைவுக்கான சுழற்சி தற்போது துவங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்தமாகவே இருக்கும் நிலையில், வட்டி விகிதங்கள் குறையும் என, எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|