பதிவு செய்த நாள்
04 நவ2012
06:21
புதுடில்லி:
நடப்பு பருவத்தில், உள்நாட்டில், பருத்தி கொள்முதலுக்கான குறைந்தபட்ச
ஆதரவு விலையை, மத்திய அரசு, 18-29 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், நடப்பு
பருவத்தில், 90 லட்சம் பருத்தி பொதிகளை கொள்முதல் செய்யவும்
திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அரசு, நாட்டின் வேளாண் உற்பத்தியை
அதிகரிக்கும் வகையிலும், வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும்,
ஒவ்வொரு ஆண்டும், முக்கிய தானிய வகைகள், கரும்பு, எண்ணெய் வித்துக்கள்,
பருத்தி உள்ளிட்டவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி
வருகிறது.இவ்வகையில், அக்டோபர் மாதம் முதல் துவங்கியுள்ள பருவத்தில்,
பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுஉள்ளது. இவ்வகையில்,
நடுத்தர வகை பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, 29 சதவீதம்
உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு குவிண்டாலின் விலை, 2,800 லிருந்து,
3,600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால், நீள்வகை
பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, 18 சதவீதம் உயர்த்தப்பட்டு, 3,300
லிருந்து, 3,900 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மத்திய ஜவுளி அமைச்சகம்
தெரிவித்துள்ளது.நடப்பு பருவத்தில் (அக்.,- செப்.,), நாட்டின் பருத்தி
உற்பத்தி, 3.34 கோடி பொதிகளாக அதிகரிக்கும் என, பருத்தி ஆலோசனை கழகம்
மதிப்பீடு செய்துள்ளது.
இந்நிலையில், நடப்பு பருவத்தில், உள்நாட்டில், பருத்தி பயன்பாடு, 2.60 கோடி
பொதிகளாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி உபரி, 70 லட்சம்
பொதிகளாக இருக்கும்.உள்நாட்டில், பருத்திக்கான தேவை அதிகரித்து வருகிறது.
ஆனால், சர்வதேச அளவில், பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க
நிலையால், பருத்தி பயன்பாடு குறைந்துஉள்ளது. இதனால், சர்வதேச சந்தையில்
பருத்தியின் விலை குறைந்து உள்ளது. இது, இந்திய பருத்தி சந்தையிலும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசு, நடப்பு பருவத்தில், பருத்தியை
சிறந்த முறையில் கொள்முதல் செய்யும் வகையில், பருத்தி அதிகளவு
உற்பத்தியாகும், நாட்டின் முக்கிய ஒன்பது மாநிலங்களில், 288 கொள்முதல்
மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலையில், பருத்தியை கொள்முதல் செய்வதற்காக, இந்திய
பருத்தி கழகம், 15 ஆயிரம் கோடி ரூபாய் நடைமுறை மூலதனத்தை திரட்டிக்
கொண்டுள்ளது. மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளி துறை அமைச்சர் ஆனந்த்
சர்மா, பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான ஆய்வு
கூட்டம் ஒன்றை, அண்மையில் மேற்கொண்டார்.இதையடுத்து, உள்நாட்டில்,
பருத்தியின் விலை உயராமல் உள்ளது. குறிப்பாக, ஆந்திராவில், குறைந்தபட்ச
ஆதரவு விலையை விட, பருத்தியின் விலை குறைவாகவே உள்ளது. அதேசமயம்,
மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய
மாநிலங்களில், பருத்தியின் விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒட்டியே
உள்ளது.இந்திய பருத்தி கழகம், பஞ்சாபில், 20 கொள்முதல் மையங்களை அமைக்க
திட்டமிட்டுள்ளது. இது தவிர, அரியானா (14 மையங்கள்), ராஜஸ்தான் (28),
குஜராத் (47), மகாராஷ்டிரா (55), ஆந்திரா (17), கர்நாடகா (13), ஒடிசா (ஏழு)
ஆகிய மாநிலங்களிலும் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|