பதிவு செய்த நாள்
20 நவ2012
02:01
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், சென்ற 19ம் தேதி வரையிலுமாக, நாட்டின், நெல் கொள்முதல், 1.11 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 99 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது என, இந்திய உணவு கழகம் (எப்.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், பஞ்சாப் மாநிலத்தின் நெல் கொள்முதல், 76.30 லட்சம் டன்னிலிருந்து, 83 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் நெல் கொள்முதல், 31 சதவீதம் வளர்ச்சிகண்டு, 25.30 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் நெல் கொள்முதல் முறையே, 1.44 லட்சம் டன் மற்றும் 1.38 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில், ஆண்டுதோறும், எப்.சி.ஐ. மூலம், 3.50 - 3.80 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு, கொள்முதல் செய்யப்படும் நெல், பொது வினியோக திட்டத்தின் கீழ், குறைந்த விலையில், நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், எப்.சி.ஐ., 4 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 15 சதவீதம் அதிகமாகும்.தற்போது, நாடு தழுவிய அளவில், 22 ஆயிரம் நெல் கொள்முதல் மையங்கள் உள்ளன. நடப்பு பருவத்தில், கூடுதலாக, 8,500 மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பீகாரில், அதிக மையங்கள் திறக்கப்பட உள்ளன.சென்ற 1ம் தேதி வரையிலுமாக, இந்திய உணவு கழகத்தின் கையிருப்பில், 6.96 கோடி டன் உணவு தானியங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|