பதிவு செய்த நாள்
26 நவ2012
05:13
புதுடில்லி:
உர மானிய நிலுவையை வழங்க, கூடுதல் தொகை ஒதுக்குமாறு, மத்திய
நிதியமைச்சகத்திடம் கோரியுள்ளதாக, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத் துறை இணை
அமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜெனா, பார்லிமென்டில் தெரிவித்தார்.அவர்,
மேலும் கூறியதாவது:நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டிற்கான மத்திய
பட்ஜெட்டில், இறக்குமதி செய்யப்படும், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ்
உரங்களுக்கு மானியம் வழங்க, 12,576 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில்,
ஏற்கெனவே, 12,477 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
உரத்திற்கான நிலுவையை வழங்க, கூடுதல் தொகையை கோரியுள்ளோம்.நிலுவையை
வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது, கூடுதல் நிதியை கொண்டு சரி
செய்யப்படும்.அதே சமயம், இறக்குமதியாகும் யூரியாவிற்கான, மானியம் வழங்க
போதுமான நிதி உள்ளது.நடப்பு நிதியாண்டில், யூரியாவிற்கு, 18,016 கோடி
ரூபாய் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், 12,189 கோடி ரூபாய்
வழங்கப்பட்டு விட்டது. எஞ்சிய தொகை, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள்
வழங்கப்படும். அனைத்து உர, யூரியா நிறுவனங்களும், அதிக செலவு பிடிக்கும்
நாப்தாவிற்கு பதிலாக, குறைந்த செலவினம் கொண்ட, இயற்கை எரிவாயுவை பயன்படுத்த
வேண்டும் என்பது குறித்த கொள்கை திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கி
வருகிறது.
யூரியா உற்பத்திக்கான மொத்த செலவில், 80 சதவீதம் எரிபொருளுக்காக
செலவிடப்படுகிறது. எரிவாயு மூலம் ஒரு டன் யூரியா தயாரிக்க, 8,500 ரூபாய்
செலவாகிறது. அதேசமயம், நாப்தா மூலம் ஒரு டன் யூரியா உற்பத்தி செய்ய, 28
ஆயிரம் ரூபாய் செலவாகிறது.நாட்டில், 28 உர நிறுவனங்கள் உள்ளன. இவற்றில்,
எட்டு நிறுவனங்கள் நாப்தாவை பயன்படுத்துகின்றன. நாட்டின் மொத்த யூரியா
உற்பத்தி, 2.20 கோடி டன்னாக உள்ளது. இதில், ஐந்தில் ஒரு பங்கு, நாப்தா
வாயிலாக உற்பத்தி செய்யப்படுகிறது.பெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
மற்றும் இந்துஸ்தான் பெர்டிலைசர் கார்ப்பரேஷன் நிறுவனங்களின், மூடப்பட்ட,
எட்டு உரத் தொழிற்சாலைகளின் நிலம், இயந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பு,
5,582 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த எட்டு தொழிற்சாலைகளின்
புனரமைப்பிற்கு, கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஒவ்வொரு
தொழிற்சாலையும், ஆண்டுக்கு குறைந்தபட்சம், 12.70 லட்சம் டன் யூரியாவை
உற்பத்தி செய்யக்கூடிய, திறன் கொண்டவையாக அமைக்க, மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.
"பிரம்மபுத்ரா வேலி பெர்டிலைசர் கார்ப்பரேஷன்'
நிறுவனத்தின், மூடப்பட்ட நாம்ரூப் தொழிற்சாலையின், முதல் பிரிவின் மதிப்பு,
20.75 கோடி ரூபாய் என, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள காலி நிலத்தில்,
அம்மோனியா- யூரியா தொழிற்பிரிவை அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு
வருகிறது.இவ்வாறு, ஸ்ரீகாந்த் குமார் ஜெனா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|