பதிவு செய்த நாள்
03 டிச2012
00:23
புதுடில்லி:நடப்பு சந்தை பருவத்தில் (அக்.,-செப்.,), நவம்பர் 27ம் தேதி வரையிலுமாக, நாட்டின், நெல் கொள்முதல், 1.16 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற பருவத்தின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 8 சதவீதம் அதிகமாகும் என, இந்திய உணவு கழகம் (எப்.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.
பொது வினியோக திட்டம்:மத்திய அரசு, எப்.சி.ஐ., மாநில அரசுகளின் முகமை அமைப்புகள் வாயிலாக, விவசாயிகளிடம் இருந்து, நெல், கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை கொள்முதல் செய்து வருகிறது.
இவ்வாறு, கொள்முதல் செய்யப்படும், தானியங்கள் பொது வினியோக திட்டத்தின் கீழ், குறைந்த விலையில், நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.நடப்பு வேளாண் பருவத்தில், பற்றாக்குறையான மழைப் பொழிவால், நாட்டின், நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலும், மத்திய அரசின், நெல் கொள்முதல் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
இதுவரையிலுமாக, மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலில், ஆந்திரா, பஞ்சாப், அரியானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் பங்களிப்பே மிகவும் அதிகமாக உள்ளது.நடப்பு சந்தை பருவத்தில், 4 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற பருவத்தில், 3.50 கோடி டன் என்ற அளவில் இருந்தது. மத்திய அரசு, நெல் கொள்முதலை அதிகரிப்பதற்காக, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி உள்ளது.
நடப்பு பருவத்தில், ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 1,250 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற பருவத்தில் வழங்கப்பட்ட தொகையை விட, 170 ரூபாய் அதிகமாகும்.
சென்ற 27ம் தேதி வரையிலுமாக மேற்கொள்ளப்பட்ட, நெல் கொள்முதலில், பஞ்சாப் மாநிலம், 84 லட்சம் டன் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த பருவத்தின், இதே காலத்தில், இம்மாநிலத்தின் நெல் கொள்முதல், 76 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.
ஆந்திரா:கணக்கீட்டு காலத்தில், அரியானா மாநிலத்தின் நெல் கொள்முதல், 19 லட்சம் டன்னிலிருந்து, 25 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் நெல் கொள்முதல், 25 ஆயிரம் டன்னிலிருந்து, 1.40 லட்சம் டன்னாக உயர்ந்துஉள்ளது.நடப்பு சந்தை பருவத்தில், ஆந்திராவின் நெல் கொள்முதல், 96 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற பருவத்தில், இம்மாநிலத்தில் இருந்து, 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு பருவத்தில், இதுவரையிலுமாக, ஆந்திராவின் நெல் கொள்முதல், 3 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.
கையிருப்பு:சென்ற அக்டோபர் 1ம் தேதி வரையிலுமாக, மத்திய அரசின் கிடங்குகளில், 2.89 கோடி டன் கோதுமையும், 2.30 கோடி டன் நெல்லும் கையிருப்பில் உள்ளன.பருவ மழை பாதிப்பால், அண்மையில் முடிவுற்ற கரீப் பருவத்தில், நாட்டின், நெல் உற்பத்தி, 8.50 கோடி டன் என்ற அளவில் தான் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, சென்ற கரீப் பருவத்தில், 9.07 கோடி டன் என்ற அளவில் உயர்ந்திருந்தது. சென்ற முழு வேளாண் பருவத்தில், இந்தியாவின் நெல் உற்பத்தி, சாதனை அளவாக, 10.34 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|