பதிவு செய்த நாள்
04 டிச2012
00:15
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில்,கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானங்களை நிறுத்துவதற்கும், இதர பணிகளுக்காகவும், 19 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தை பயன்படுத்திய வகையில்,மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு (எம்.ஐ.ஏ.எல்.,), கிங்பிஷர் நிறுவனம் 22 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
நோட்டீஸ்:இதை செலுத்துவதற்கான 'கெடு' முடிவடைந்ததை அடுத்து, விமான தளத்தை காலி செய்யுமாறு கிங்பிஷர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப, எம்.ஐ.ஏ.எல்., திட்டமிட்டுள்ளது.கடந்த ஜூன் மாத நிலவரப்படி, எம்.ஐ.ஏ.எல்., நிறுவனத்திற்கு, கிங்பிஷர் 60 கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தது. அப்போது, கிங்பிஷர் அளித்த 30 கோடி ரூபாய்க்கான காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.இது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதை அடுத்து, கிங்பிஷர், தவணை முறையில் பாக்கியை செலுத்தி வந்தது.
இந்நிலையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானிகளின் வேலை நிறுத்த போராட்டத்தால் அதன் விமான சேவை முடங்கியது.பின்னர், இப்போராட்டம் கைவிடப்பட்டாலும், விமான போக்குவரத்து ஆணையத்தின் தடை உத்தரவால், மீண்டும் விமான சேவையை மேற்கொள்ள முடியாத நிலையில் கிங்பிஷர் உள்ளது.
இதனிடையே, விமான தள வாடகை பாக்கி பிரச்னை காரணமாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில், 15 ஆயிரம் சதுர அடி பரப்பை, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திரும்ப ஒப்படைக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விமான சேவை மேற்கொள்ளாத நிலையில், வாடகை செலவை குறைக்கும் நோக்கில், கிங்பிஷர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
போட்டி:எனினும், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கிங்பிஷர் வசம் 4,000 சதுர அடி பரப்பு இருக்கும். நெருக்கடிகள் தீர்ந்து, மீண்டும் முழு வீச்சில் விமானசேவையை துவங்கிய பிறகு, தேவைப்படும் இடத்தை கிங்பிஷர் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளது.இதனிடையே, கிங்பிஷர் ஒப்படைக்கும் இடத்தை பெறுவதில், முன்னணியில் உள்ள இரண்டு சிறிய விமான நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|