பதிவு செய்த நாள்
10 டிச2012
00:29
புதுடில்லி:இந்தியாவில், அலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை, விரைவாக வளர்ச்சி கண்டு வருவதாக, மத்திய தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் மிலிந்த் தியோரா, ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது:உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய தொலைத்தொடர்பு துறை சிறப்பான அளவில் வளர்ச்சிகண்டு வருகிறது.கடந்த 2005-06ம் நிதியாண்டில், 87,646 கோடி ரூபாயாக இருந்த, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின், மொத்த வருவாய், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 1.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பு, 1.29 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்களின் வருவாய், 33,629 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.கடந்த 2005ம் ஆண்டு மார்ச் இறுதி முதல், நடப்பு 2012ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், தொலைத்தொடர்பு துறையில், பொதுத் துறை நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 52.9 சதவீதத்தில்இருந்து, 13.7 சதவீதமாக குறைந்துள்ளது.
இதே காலத்தில், தனியார் நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 47.1 சதவீதத்திலிருந்து, 86.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலத்தில், இந்தியாவில், தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 95.13 கோடியாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 2005ம் ஆண்டின், இதே மாதத்தில், 9.84 கோடி என்ற அளவில், மிகவும் குறைவாக இருந்தது. இவ்வாறு தியோரா கூறினார்.தொலை தொடர்பு துறையில், பொதுதுறை நிறுவனங்களை விட தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|