பதிவு செய்த நாள்
10 டிச2012
00:30
புதுடில்லி:சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின், கைவினை பொருட்கள் ஏற்றுமதி, 10.60 கோடி டாலராக (583 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (7.46 கோடி டாலர்/ 410 கோடி ரூபாய்) விட, 42 சதவீதம் அதிகம் என, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு (இ.பி.சி.எச்.,) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கைவினை பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில், ஆர்டர்கள் வந்ததால், இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய சந்தைகளை தவிர்த்து, மத்திய கிழக்கு நாடுகள், ரஷ்யா, லத்தீன் அமெரிக்கா போன்ற புதிய சந்தைகளுக்கும், இந்திய கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மதிப்பீட்டு காலத்தில், வண்ணம் தீட்டப்பட்ட துண்டுகள் ஏற்றுமதி, 124 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதையடுத்து, மரச்சாமான்கள் ஏற்றுமதி, 91 சதவீதமும், கவரிங் நகைகள் ஏற்றுமதி, 85 சதவீதமும் வளர்ச்சிஅடைந்துள்ளன.நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, 18.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 160 கோடி டாலராக (8,800 கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது.
நடப்பு நிதியாண்டில், கைவினை பொருட்கள் ஏற்றுமதி, 320 கோடி டாலரை (17,600 கோடி ரூபாய்) எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 275 கோடி டாலராக (15,125 கோடி ரூபாய்) இருந்தது.இந்தியாவில், கைவினை பொருட்கள் உற்பத்திக்கு, மொராதாபாத், ஜெய்ப்பூர், சகாரன்பூர், ஜோத்பூர், நரசபூர் ஆகிய நகரங்கள் முக்கிய மையங்களாக திகழ்கின்றன. நாடு தழுவிய அளவில், இத்தொழிலில், 10 லட்சத்திற்கும் அதிகமான கலைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|