பதிவு செய்த நாள்
03 ஜன2013
02:30
புதுடில்லி:உள்நாட்டில் செயல்படும், பல சிமென்ட் நிறுவனங்கள், நடப்பு 2013ம் ஆண்டில், அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.தற்போது, இந்தியாவில் செயல்படும், இத்துறை நிறுவனங்களின் உற்பத்தித் திறன், ஆண்டுக்கு, 32.40 கோடி டன்னாக உள்ளது.
அடிப்படை கட்டமைப்பு:இந்நிலையில், ரியல் எஸ்டேட் மற்றும் அடிப்படை கட்டமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட சுணக்க நிலையால், சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் மொத்த உற்பத்தித் திறனில், 70-80 சதவீத அளவிற்கே, சிமென்ட் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், நாட்டின் பல மாநிலங்களில், அடிப்படை கட்டமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளில், முன்னேற்றம் ஏற்படத் துவங்கியுள்ளது.இதனால், இத்துறையில் ஈடுபட்டு வரும், ஒரு சில நிறுவனங்கள், நடப்பாண்டில், அவற்றின் சிமென்ட் உற்பத்தித் திறனை, கூடுதலாக, 3-4 கோடி டன் அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து, வட மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி சிமென்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் கூறியதாவது:நடப்பாண்டில், கட்டமைப்பு துறையில் முன்னேற்றம் ஏற்படத் துவங்கியுள்ளது. எனவே, நிறுவனம், நடப்பாண்டில், ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேவை:குறிப்பாக, சிமென்டிற்கான தேவை அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால், நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.கர்நாடகாவில் செயல்படும், சாகர் சிமென்ட் மற்றும் செட்டிநாடு சிமென்ட் நிறுவனங்கள், நடப்பாண்டில், அவற்றின் உற்பத்தித் திறனை முறையே கூடுதலாக, ஆண்டுக்கு, 30 லட்சம் டன் மற்றும் 25 லட்சம் டன் என்ற அளவில் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
அல்ட்ராடெக் சிமென்ட் :நிறுவனமும், அதன் உற்பத்தித் திறனை கூடுதலாக, 44 லட்சம் டன் என்ற அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது.நாட்டின் பொருளாதார மந்த நிலையால், தொழில் துறை உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 0.4 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 2.5 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி:இந்நிலையில், நடப்பு நிதிஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.6 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், இந்த வளர்ச்சி, 5.7-5.9 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும் என, மத்திய நிதி அமைச்சகம் மறுமதிப்பீடு செய்துள்ளது.
இச்சூழ்நிலையில், மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி, நடப்பு ஜனவரி மாதத்தில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில், கட்டுமான நடவடிக்கைகளில் விறுவிறுப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, பல சிமென்ட் நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தித் திறன் அதிகரிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவந்துள்ளது.குஜராத் மாநிலத்தில், நான்காவது முறையாக, முதல்வராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, அம் மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக, செய்தி வெளியானது.
இதனால், அம்மாநிலத்திலும், சிமென்ட்டிற்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மூலப்பொருட்கள்கடந்த ஒரு சில மாதங்களாக, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட முக்கிய மூலப் பொருட்களின் விலை குறைவாக உள்ளது. இது, இத்துறை நிறுவனங்களின் லாப வளர்ச்சிக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|