பதிவு செய்த நாள்
05 ஜன2013
00:48
சென்ற 2012ம் ஆண்டில், நாட்டின் முன்பேர சந்தைகளில், தொழில் துறை சார்ந்த நுகர்வோர் பொருட்களை விட, வேளாண் பொருட்கள் முதலீட்டாளர்களுக்கு வருவாயை வாரி வழங்கியுள்ளன.கடந்த 2012ம் ஆண்டில், சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், தொழில் துறை சார்ந்த அலுமினியம், தாமிரம் போன்ற பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தது. இதனால், இவற்றின் விலையும் மிகப் பெரிய அளவில் அதிகரிக்காமல் இருந்தது.
கொள்முதல் விலை:அதே சமயம், பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் நிலவிய வறட்சியால், சர்வதேச சந்தையில் வேளாண் பொருட்களுக்கான தேவை அதிகரித்து, அவற்றின் விலை உயர்ந்தது.இதனால், முன்பேர வர்த்தக சந்தைகளில், தொழில் துறை சார்ந்த பொருட்களை விட, வேளாண் பொருட்களின் விலை கிடு கிடு வென, உயர்ந்தது.அதே சமயம், மத்திய அரசும், முக்கிய வேளாண் பொருட்களுக்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையை, 30 சதவீதம் வரை உயர்த்தியது.
பருத்தி:இதன்படி, ஒரு குவிண்டால், பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலை, 2,800 ரூபாயிலிருந்து, 3,600 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒரு குவிண்டால், மஞ்சள் சோயா விலை, 550 ரூபாய் உயர்த்தப்பட்டு, 2,240 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.இத்தகைய நடவடிக்கைகளால், சென்ற ஆண்டு, முன்பேர சந்தையில் வேளாண் பொருட்கள் மீது முதலீடு செய்தவர்களுக்கு சிறப்பான வருவாய் கிடைத்துஉள்ளது.
சென்ற ஆண்டு, ஜனவரி மாதம், முன்பேர சந்தையில், ஒரு கிலோ ஏலக்காய் விலை, 598 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, டிசம்பர் இறுதியில், 70 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,016 ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், ஒரு குவிண்டால் மஞ்சள் விலை, 38 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,770 ரூபாயிலிருந்து, 6,600 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு குவிண்டால் சோயா விலை, 29 சதவீதம் உயர்ந்து, 2,521 ரூபாயிலிருந்து, 3,240 ரூபாயாகவும், கொண்டைக் கடலை விலை, 15 சதவீதம் அதிகரித்து, 3,339 ரூபாயிலிருந்து, 3,825 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
கச்சா எண்ணெய்: கடந்த ஓராண்டில், முன்பேர சந்தையில், ஒரு குவிண்டால் சர்க்கரை விலை, 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,875 ரூபாயிலிருந்து, 3,248 ரூபாயாக அதிகரித்து உள்ளது.அதேசமயம், தொழில் துறை சார்ந்த பொருட்களின் விலை, மிகச் சிறிய அளவிலேயே உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 6.83 சதவீதம் உயர்ந்து, 5,710 ரூபாயிலிருந்து, 6,100 ரூபாய் என்ற அளவில், சற்றே ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ தாமிரத்தின் விலை, 8 சதவீதம் அதிகரித்து, 406 ரூபாயிலிருந்து, 438 ரூபாய் என்ற அளவில், குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளது.அதே சமயம், ஒரு குவிண்டால் ரப்பர் விலை, 16.77 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 19,875 ரூபாயிலிருந்து, 16,541 ரூபாயாக குறைந்துள்ளது.
அண்மையில் முடிவுற்ற கரீப் பருவத்தில், குறைவான மற்றும் தாமதமான மழைப் பொழிவால், நாட்டின் வேளாண் பொருட்கள் உற்பத்தி குறையும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. குறிப்பாக, சாதகமற்ற பருவ நிலையால், கேரளாவில், ஏலக்காய் உற்பத்தி வெகுவாக சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சாகுபடி:எனினும், ஒட்டுமொத்த அளவில், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும், தற்போதைய சூழலில், பல வேளாண் பொருட்களின் உற்பத்தி மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், நடப்பு ரபி பருவத்தில், பெரும்பாலான தானியங்களின் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதால், வரும் செப்டம்பர் வரை வேளாண் பொருட்களின் விலை, ஓரளவிற்கு நிலையாகவே இருக்கும் என, தெரிகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|