பதிவு செய்த நாள்
07 ஜன2013
01:22
பழநி:தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால், நெல், மக்காசோளத்தை தொடர்ந்து, கரும்பு விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல், பாதியில் அறுவடை செய்கின்றனர். இதனால் ஆலைகளில், வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, வேடசந்தூர். ஒட்டன்சத்திரம், கோவை மாவட்டத்தில், உடுமலைபேட்டை, தாராபுரம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்லம் காய்ச்சும் (உற்பத்தி) ஆலைகள் உள்ளன. இவர்கள் நன்கு விளைந்த கரும்பில் சாறெடுத்து, சுண்ணாம்பு (கெட்டி தன்மைக்கும்), மட்டிகிளிங் பவுடர் (அழுக்கி நீக்கியாக) சிறிதளவு கலந்து பாகுவாக காய்ச்சி, அச்சுவார்க்கின்றனர். மொத்தமாக நாள் ஒன்றுக்கு, 30 சிப்பம் (ஒரு சிப்பம்=30 கிலோ) வரை வெல்லம் தயார் செய்கின்றனர்.
போதிய மழை இல்லாததால், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள், பாதி வளர்ந்த நிலையில், இளங்கரும்பாக அறுவடை செய்து, வெல்ல ஆலைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.ஆறு சிப்பம் வெல்லம் தயாரிக்க, 1.50 டன் கரும்பு தேவைப்படும். அதே அளவு பாதியில் அறுவடை செய்யப்பட்ட இளங்கரும்பை, டன் ஒன்றுக்கு, 1,800 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வாங்கி, சாறெடுத்து, பாகு காய்ச்சும் போது, நான்கு சிப்பம் மட்டுமே கிடைக்கிறது. இதனால், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக, 20 சிப்பம் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதுவும் தரம் இல்லாத நிறம் குறைந்த (கருப்பாக) வெல்லமாக உள்ளது.
பொங்கல்:இவ்வகை வெல்லத்திற்கு, சந்தையில் மிக குறைந்த விலையே மதிப்பிடப்படுகிறது. வெல்ல ஆலைகளுக்கு போதிய கரும்பு கிடைக்காததால், பல ஆலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ள போதிலும், உற்பத்தி செய்ய முடியாமல் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சந்தையில் வெல்லத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.
நெய்க்காரப்பட்டி வெல்ல ஆலை உரிமையாளர் முனியாண்டி கூறியதாவது:வெல்லத்தை அருகில் உள்ள புரோக்கர்களிடம் சிப்பங்களாக வழங்குகிறோம். அவர்கள் நிர்ணயம் செய்யும் விலையிலிருந்து, ஏலம் கேட்டு, வெளியூர் மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம், தஞ்சாவூர், திருச்சி உட்பட பல மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர்.போதிய கரும்பு கிடைக்காததால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வெல்லம் காய்ச்சுகிறோம். பொங்கல் பண்டிகைக்கு தேவை அதிகரித்தும், தயார் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|