பதிவு செய்த நாள்
04 பிப்2013
00:42
புதுடில்லி:நடப்பு ரபி பருவத்தில், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட, ஒரு சில மாநிலங்களில், போதிய அளவிற்கு, மழை இல்லாததாலும், ஒரு சில மாவட்டங்களில், வறட்சி ஏற்பட்டுள்ளதாலும், நெல் சாகுபடி பரப்பளவு, 27 சதவீதம் சரிவடைந்துள்ளது. மகாராஷ்டிரா:அதிக அளவில், நெல் உற்பத்தியாகும், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், நடப்பு ரபி பருவத்தில் நெல் உற்பத்தி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ரபி பருவத்தில், மேற்கண்ட மாநிலங்களில், ஒட்டுமொத்த அளவில், நெல் சாகுபடி பரப்பளவு, 14.76 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டின், இதே பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட சாகுபடி பரப்பளவை (20.42 லட்சம் ஹெக்டேர்) விட, 27 சதவீதம் குறைவாகும் என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆந்திர மாநிலத்தில், நடப்பு ரபி பருவத்தில், நெல் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டின், இதே பருவத்தை விட, 26 சதவீதம் சரிவடைந்து, அதாவது, 9.08 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 6.68 லட்சம் ஹெக்டேராக குறைந்து உள்ளது.இதே காலத்தில், கர்நாடகாவில், இதன் சாகுபடி பரப்பளவு, 1.27 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 79 ஆயிரம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில், இது, 7 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 4.30 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.இருப்பினும், தமிழகத்தில், நெல் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டின், ரபி பருவத்தை போன்று, 76 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவில் மாற்றம் இன்றி உள்ளது.கோதுமை சாகுபடி:நாடு தழுவிய அளவில் பருப்பு வகைகள், கடுகு, சோளம், பார்லி மற்றும் மக்காச் சோளம் உள்ளிட்ட, இதர தானியங்களின் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டின், ரபி பருவத்தை விட, அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஒட்டுமொத்த அளவில், கோதுமை சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது.
என்றாலும், நாட்டின் கோதுமை உற்பத்தி, கடந்த ஆண்டை போன்று, 9.40 கோடி டன்னாக இருக்கும் என, மத்திய அரசு, அண்மையில் தெரிவித்திருந்தது.மக்காச்சோளம்:உள்நாட்டில், சோளம் பயிரிடும் பரப்பளவு, பிப்ரவரி 1ம் தேதி வரையிலுமாக, 38.81 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே பருவத்தில், 37.65 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இதே காலத்தில், மக்காச் சோளம் பயிரிடும் பரப்பளவு, 12.58 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 14.28 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
பார்லி, சாகுபடி பரப்பளவு, 7.94 லட்சம் ஹெக்டேராகவும் (7.84 லட்சம் ஹெக்டேர்), இதர பருப்பு வகைகளின் சாகுபடி பரப்பளவு, 93.20 லட்சம் ஹெக்டேராகவும் (89.58 லட்சம் ஹெக்டேர்), பச்சை பயிறு சாகுபடி பரப்பளவு, 5.72 லட்சம் ஹெக்டேராகவும் (5.34 லட்சம் ஹெக்டேர்) உயர்ந்துள்ளன.
தானிய உற்பத்தி:அதேசமயம், உளுந்து சாகுபடி பரப்பளவு, 9.31 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 7.43 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.கடந்த ஆண்டு, நாட்டின், ஒட்டு மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி, 26 கோடி டன்னாக இருந்தது. இதில், நெல் மற்றும் கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி, சாதனை அளவாக, முறையே, 10.40 கோடி டன் மற்றும் 9.40 கோடி டன் என்ற அளவில் இருந்தது என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|