பதிவு செய்த நாள்
09 பிப்2013
00:38
புதுடில்லி:சென்ற டிசம்பர் மாதத்தில், உள்நாட்டில், அலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 2.60 கோடி குறைந்து, 89.55 கோடியாக சரிவடைந்துள்ளது என, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டு:கடந்த ஒரு சில மாதங்களாக, உள்நாட்டில் செயல்படும், ஒரு சில அலைபேசி சேவை நிறுவனங்கள், பயன்படுத்தாமல் உள்ள,"சிம் கார்டு'களை முடக்கியதை அடுத்து, ஒட்டுமொத்த அளவில், அலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற நவம்பர் மாதம், உள்நாட்டில், அலைபேசி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 89.06 கோடியாக குறைந்தது. இது, டிசம்பர் மாதத்தில், மேலும் சரிவடைந்து, 86.47 கோடியாக குறைந்து போனது.
கடந்த டிசம்பர் மாதத்தில், யூனிடெக், எச்.எப்.சி.எல்., மற்றும் பீ.எஸ்.என்.எல்., ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே கூடுதலாக, 9.99 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. ஏனைய அனைத்து நிறுவனங்களும், வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
வோடபோன்ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்தில் மட்டும், 1.57 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து, சென்ற டிசம்பர் மாத இறுதியில், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11.85 கோடியாக குறைந்துள்ளது.இதைதொடர்ந்து, வோடபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 32.80 லட்சம் குறைந்து, 14.75 கோடியாக குறைந்துள்ளது.
டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின், வாடிக்கையாளர் எண்ணிக்கை, 29.50 லட்சம் குறைந்து, 6.96 கோடியாகவும், ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 19.70 லட்சம் குறைந்து, 6.33 கோடியாகவும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 17 லட்சம் குறைந்து, 18.19 கோடியாகவும் சரிவடைந்துள்ளன.
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.97 லட்சம் குறைந்து, 11.39 கோடியாக சரிவடைந்துள்ளது.சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தில், அலைபேசி சேவை வழங்கி வரும், சிஸ்டெமா ஷியாம் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 7.89 லட்சம் குறைந்து, 1.49 கோடியாக சரிவடைந்துள்ளது. பீ.எஸ். என்.எல்.,அதேசமயம், பொதுத்துறையை சேர்ந்த பீ.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற டிசம்பர் மாதத்தில், 13,013 உயர்ந்து, 9.99 கோடியாக அதிகரித்துள்ளது. மற்றொரு பொதுத் துறை நிறுவனமான, எம்.டீ.என்.எல்.,ன், வாடிக்கையாளர் எண்ணிக்கை, 2,975 குறைந்து, 53 லட்சமாக உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வரையிலுமாக, நாடு தழுவிய அளவில், 8 கோடிக்கும் அதிகமானோர், அலைபேசி எண்ணை மாற்றாமல், வேறொரு நிறுவனத்தின் சேவையை பெற விண்ணப்பித்துள்ளனர். மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், ராஜஸ்தான் மாநிலத்தில், மிக அதிக அளவாக, 75.90 லட்சம் வாடிக்கையாளரும், குஜராத்தில், 69.40 லட்சம் வாடிக்கையாளரும் விண்ணப்பித்துள்ளனர்.இவற்றையடுத்து, கர்நாடகா (99 லட்சம் பேர்), ஆந்திரா (74 லட்சம் பேர்) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்ற டிசம்பர் மாதத்தில் மட்டும், எண்ணை மாற்றாமல், வேறொரு நிறுவனத்தின் சேவையை பெறுவதற்காக, 29.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.சாதாரண வகை தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற நவம்பர் மாதத்தில், 3.09 கோடியாக குறைந்திருந்தது. இது, டிசம்பர் மாதத்தில், மேலும் குறைந்து, 3.07 கோடியாக சரிவடைந்துள்ளது.
நாடு தழுவிய அளவில், சென்ற டிசம்பர் மாதத்தில், அகண்ட அலைபேசி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 1.50 கோடி என்ற அளவில் உயர்ந்துஉள்ளது. இது, கடந்த நவம்பர் மாதத்தை (1.49 கோடி வாடிக்கையாளர்) விட, 0.67 சதவீதம் அதிகமாகும் என, "டிராய்' அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|