பதிவு செய்த நாள்
15 பிப்2013
00:01
புதுடில்லி:மத்திய அரசு, வரும் 2013 - 14ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு, கூடுதல் மூலதனமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் என, தெரிகிறது.இந்திய வங்கித் துறையில், வரும் ஏப்ரல் முதல், "பேசல்-3' விதிமுறை நடைமுறைக்கு வர உள்ளது. இதன் படி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், "பேசல்-3' விதிமுறையின் கீழ், வங்கிகள் குறைந்தபட்சமாக, 7 சதவீத அளவிற்கு மூலதன இருப்பு விகிதத்தை கொண்டிருக்க வேண்டும்.
விதிமுறை:புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்றால், இந்திய வங்கித் துறையில், 5 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் மூலதனம் வழங்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதில், வரும் 2013 - 14ம் நிதியாண்டிற்கு, கூடுதல் மூலதனமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, தெரிகிறது. பொதுத் துறையை சேர்ந்த, 12 வங்கிகளுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது.
இது குறித்தும், எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப் படும் என்பது பற்றியும், வரும் 2013 - 14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.நடப்பு 2012 - 13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், சென்ற ஜனவரி நிலவரப்படி, 10 வங்கிகளுக்கு மட்டும், 12,517 கோடி ரூபாய், கூடுதல் மூலத னமாக வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.இதில், பெரும்பான்மை மூலதன தொகையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பெற்றுள்ளது. இவ்வங்கி, மத்திய அரசிடம் இருந்து, 3,004 கோடி ரூபாயை கூடுதல் மூலதனமாக பெற்றுள்ளது.
பங்கு மூலதனம்:தற்போது, பொதுத் துறை வங்கிகளில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதை, 51 சதவீதமாகக் குறைத்தால், "பேசல்-3' விதிமுறைகளுக்காக, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு வழங்க உள்ள கூடுதல் மூலதனச் சுமை, 70 ஆயிரம் கோடியாக குறையும் என, அண்மையில் ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவ் யோசனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|