பதிவு செய்த நாள்
18 பிப்2013
00:29
சென்னை:தமிழகத்தில் அதிகரிக்க உள்ள மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு, நிலக்கரி கையாளும் திறனை உயர்த்த வேண்டும் என, எண்ணூர் துறைமுகத்திற்கு, தமிழ்நாடு மின் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.எண்ணூர் துறைமுகம், தற்போது, ஆண்டுக்கு, 95 லட்சம் டன் நிலக்கரியை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.
மின் தட்டுப்பாடு:இங்கு இறக்குமதியாகும் நிலக்கரி, தமிழ்நாடு மின் வாரியத்தின் கீழ் செயல்படும், தமிழக அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, தமிழக அரசு, மின் உற்பத்தியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக, வடசென்னை அனல் மின் திட்டம், மேட்டூர் அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின், மின் உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம், மேற்கண்ட திட்டங்கள் மூலம், கிடைக்கும், 1,920 மெகா வாட் மின் உற்பத்தி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 8,940 மெகா வாட்டாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 2015ம் ஆண்டில், தமிழக அனல் மின் நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி, தற்போது உள்ளதை விட, ஐந்து மடங்காக அதிகரிக்க உள்ளது. இதன் மூலம், தமிழகத்தின் மின் பற்றாக்குறை பிரச்னை, ஒரு முடிவிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அனல் மின் உற்பத்தி அதிகரிப்பதற்கேற்ப, தமிழக மின் வாரியம், நிலக்கரி கொள்முதலையும் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து, வாரியம், நிலக்கரி கையாளும் திறனை அதிகப்படுத்துமாறு, எண்ணூர் துறைமுகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.இதன்படி, எண்ணூர் துறைமுகத்தின் நிலக்கரி கையாளும் திறனை, ஆண்டுக்கு, 95 லட்சம் டன்னில் இருந்து, வரும் 2015ம் ஆண்டுக்குள், 3.50 கோடி டன்னாக உயர்த்துமாறு, தமிழ்நாடு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
கப்பல் தளங்கள்:மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவாக்கப் பணிகளை அடுத்து, நடப்பாண்டின் இறுதியில், எண்ணூர் துறைமுகத்தின் நிலக்கரி கையாளும் திறன்,1.50 கோடி டன் கூடுதலாகும். வரும் ஆண்டுகளில், இது, மேலும், 1.20 கோடி டன் என்ற அளவில் அதிகரிக்கும்.தமிழ்நாடு அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதிக்காக, எண்ணூர் துறைமுகத்தில், இரண்டு கப்பல் தளங்கள் உள்ளன. மூன்றாவது தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கும், எண்ணூர் துறைமுகம் நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கையாள்வதன் மூலம், சிறப்பான வருவாயை ஈட்டி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|