பதிவு செய்த நாள்
19 பிப்2013
01:18
புதுடில்லி:இந்தியாவின் அன்னியச் செலாவணி கடன் அதிகரித்து வருவதால், உள்நாட்டில் பணவீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும், அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக, மூடீஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.மதிப்பீடு:உலக நாடுகளின் பொருளாதாரம், கடன் தகுதி ஆகிய அம்சங்களை, மூடீஸ் நிறுவனம், மதிப்பீடு செய்து தரக் குறியீட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதே போன்ற பணியில் ஈடுபட்டு வரும், ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ், பிட்ச் ஆகிய நிறுவனங்கள், இந்தியாவின் கடன் தகுதி குறித்த குறியீட்டை கடந்த ஆண்டு குறைத்தன.
ஆனால், மூடீஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார தரக் குறியீட்டை, ஸ்திரமாக உள்ளதற்கான பிரிவிலேயே வைத்திருந்தது.இந்நிலையில், முதன் முறையாக, இந்நிறுவனம், இந்திய அரசின் அன்னிய கடன், எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என, எச்சரித்துள்ளது. சென்ற ஜனவரி நிலவரப்படி, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை, 2,000 கோடி டாலராக அதிகரித்துஉள்ளது. இந்தியாவின் மாதாந்திர வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த 2011ம் ஆண்டு, 1,350 கோடி டாலராக இருந்தது. இது, 2012ம் ஆண்டு, 1,600 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
அயல்நாட்டு கடன்:இந்த பற்றாக்குறையை சமாளிக்க, அதிக அளவில் அன்னியச் செலாவணியில் கடன் வாங்கப்படுகிறது. இது, சர்வதேச நிதிச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தினால், இந்தியாவிற்கு ஏற்படும் தாக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.வர்த்தக பற்றாக்குறையால், டாலருக்கு எதிராக, ரூபாயின் மதிப்பு மேலும் குறையக் கூடும். இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை, அதிகரிக்கும். கச்சா எண்ணெய்சர்வதேச பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்வு, கடுமையான நிதிக் கொள்கையை செயல்படுத்தாமல் உள்ளது போன்றவற்றால், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
தளர்வான நிதிக் கொள்கையால், பணவீக்கம் அதிகரித்துள்ளது. இது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகளில், போட்டியை அறவே நீக்க வழி வகுத்து, வர்த்தக பற்றாக்குறை பெருக துணை புரிந்துள்ளது. எனவே, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர, உள்நாட்டில் போட்டியை ஊக்குவிக்கும் வகையில், கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|