பதிவு செய்த நாள்
28 பிப்2013
00:20
சேலம்:தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக, பருப்பு வகைகளை, அரசே மொத்தமாக கொள்முதல் செய்வதால், வெளி சந்தையில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.
நியாய விலை கடை: தமிழக நியாய விலை கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, ஒரு கிலோ தலா, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய நிதியாண்டு துவங்க, இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், நியாய விலை கடைகளுக்கு வழங்குவதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பருப்பு வகைகளின், கொள்முதலை துவக்கி உள்ளது.
சென்னையின் வடக்கு, தெற்கு பகுதிகளில் சப்ளை செய்வதற்காக, 28 ஆயிரம் டன் பருப்பை, அரசே கொள்முதல் செய்கிறது. இதில், 7,000 டன் துவரம் பருப்பு, 11 ஆயிரம் டன் உளுந்தம் பருப்பு, 10 ஆயிரம் டன், "கனடியன் எல்லோ லெண்டிஸ்' வகை பருப்பு கொள்முதல் செய்வதற்கான, ஒப்பந்த புள்ளிகள், பிப்., 22ம் தேதி திறக்கப்பட்டன.
தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள், 45 நாட்களுக்குள், பருப்பு ரகங்களை வழங்க வேண்டும் என்பதால், அவற்றை வடமாநிலங்களில் இருந்து வாங்காமல்,சேலம், சென்னை, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து, கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், பருப்பு வகைகளுக்கான தேவை அதிகரித்து, குவிண்டாலுக்கு, 500 ரூபாயும், கிலோவுக்கு, ஏழு ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.கடந்த வாரம், ஒரு குவிண்டால் முதல் ரக துவரம் பருப்பின், ஆலை கொள்முதல் விலை, 5,500 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 6,000 ரூபாயாக உயர்ந்து விட்டது.
துவரம் பருப்பு:அதுபோன்று, ஒரு குவிண்டால், இரண்டாம் ரக துவரம் பருப்பின் விலை, 5,200 ரூபாயில் இருந்து, 5,700 ரூபாயாகவும், மூன்றாம் ரகத்தின் விலை, 5,000 ரூபாயில் இருந்து, 5,500 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.இதே போன்று, உளுந்தம் பருப்பு விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு குவிண்டால், முதல் ரக உளுந்தம் பருப்பு விலை, 6,300 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 6,800 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டாம் ரகம் 6,100 ரூபாயில் இருந்து, 6,550 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|