பதிவு செய்த நாள்
06 மே2013
01:08
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரோஜா செடிகளில், "மைட்ஸ்' நோய் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதால், மலர் உற்பத்தி வீழ்ச்சியடைந்து, ரோஜா மலர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி :ஆசியாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிகளவு ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் திறந்த வெளி மற்றும் பசுமை குடோன் முறையில், 5,000 ஏக்கரில் விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்துள்ளனர்.
திறந்த வெளி சாகுபடியில் உற்பத்தி செய்யப்படும் பட்டன் ரோஸ், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மலர் சந்தைகளுக்கு விழாக்கள், முகூர்த்த நிகழ்ச்சிகளை குறி வைத்து விவசாயிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.பசுமை குடோன்களில் சாகுபடி செய்யப்படும் தாஜ்மகால், கிரான்ட் கலா, பஸ்ட்ரெட், எல்லோ, பிங், ஆரஞ்ச், ஒயிட் உள்ளிட்ட உயர் ரக ரோஜா மலர்களை வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, பெங்களூரு, ஜதராபாத், சென்னை, மும்பை, டில்லி மற்றும் வெளிநாடுகளுக்கு ஆண்டு முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர்.
தற்போது, வறட்சியால் தண்ணீர் கிடைக்காமல் ரோஜா செடிகளில் உற்பத்தியாகும் மலர்கள் தரமற்றதாக உள்ளன. செடிகளில், "ரெட் மைட்ஸ்', "பைடர் மைட்ஸ்' ஆகிய நோய் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.க்ஷ
இந்நோய் தாக்கிய செடிகளில் சிலந்திபேன் பூச்சுகள், இலைகள், பூக்களில் ஊடுருவி, செடியை நாசப்படுத்துகிறது. இலைகளில் உள்ள சாறை உறிஞ்சுகிறது. இதனால், இலைகள், மொட்டுகள் கருகி கீழே உதிர்ந்து விழுகிறது. காம்புகள் சுருங்கி விடுகிறது. மொட்டுகள், விரிந்து வீணாகிறது.கடந்த காலத்தில் காம்புடன் கூடிய ஒரு மலர், 45 செ.மீ., முதல், 50 செ.மீ., வரை, இருந்தது. நோய் தாக்குதலால் பூக்கள் சிறுத்தும், காம்புகள் கட்டையாகவும் உள்ளன. நோய் தாக்குதல், வறட்சியால் மாவட்டத்தில் பட்டன் ரோஸ், ஏற்றுமதி ரக ரோஜாக்கள் உற்பத்தி வீழ்ச்சிஅடைந்து பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:கடந்த ஒரு வாரமாக, பெங்களூரு சர்வதேச மலர் சந்தையில் ரோஜா மலர் "கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. கடந்த மாதம், 20 பூக்கள் ஒரு பஞ்ச் ரோஜா மலர்கள் வெறும், 40 ரூபாய் வரைதான் விற்பனையானது.தட்டுப்பாட்டால், ஒரு ரோஜா, 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு பஞ்ச் மலர்கள், 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
திடீர் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மைட்ஸ் நோய் தீவிரமடைந்துள்ளதால், செடிகளை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
ரோஜா மலர் விவசாயிகள் கூறியதாவது:"மைட்ஸ்' நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் ஒரு லிட்டர் கெமிக்கல் மருந்தை வாரம் இரு முறை அடிக்க வேண்டும். ஒரு லிட்டர் மருந்து அடிக்க 4,000 ரூபாய் செலவாகிறது.
மானியம்:வாரம் இரண்டு முறை மருந்து அடிக்க வேண்டும். ஆனால், அந்தளவுக்கு வருமானம் இல்லை. தற்போது தான் தட்டுப்பாட்டால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஆனால், நோய் தாக்குதல் மற்றும் வறட்சியால் செடிகளை பராமரிக்க முடியவில்லை. எனவே, தோட்டக்கலைத்துறை, மானிய விலையில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|