பதிவு செய்த நாள்
13 மே2013
00:38
வியாபாரிகள் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்ததால் தான், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு, இருப்பு, விற்பனைக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.கூடுதல் வரி:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், வட மாநிலத்தவர்கள், பணி, வியாபார நிமித்தமாக அதிகளவில் குடியேறி வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் பான் மசாலா பொருட்களை, தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், பயன்படுத்துவதால், தமிழகத்தில், பான் மசாலா பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பான் மசாலா பொருட்கள் மீது, விதிக்கப்பட்ட, 12.5 சதவீதம் வரியை, 20 சதவீதமாக உயர்த்தியது. இதனால், கூடுதல் வரி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆயத்த ஆடைகள் தவிர, ஜவுளி பொருட்களுக்கு வரி கிடையாது என்பதால், ஜவுளி என்று முறைகேடாக, பான், குட்கா பொருட்களை, ரயில்கள் மூலமாகவும், தரை மார்க்கத்தில் சரக்கு வாகனங்கள் மூலமாகவும் தமிழகத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.ஆய்வுகள், சோதனைகள் நடந்தாலும், வணிக வரித் துறை அதிகாரிகள், கணக்குக்கு ஒரு சில பார்சல்களுக்கு மட்டும் வரி போட்டுவிட்டு, வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்து வந்தனர். இதனால், நாளொன்றுக்கு, 2 கோடி ரூபாய் வரை, அரசுக்கு வரி வருவாயில் இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழக அரசு, வணிக வரித் துறை மூலம், பிப்., 17ம் தேதி, இதற்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், ஓர் அறிவிப்பை வெளியிட்டது.அந்த அறிவிப்பில், "பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், இனி கொள்முதல் மற்றும் விற்பனை விவரங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
வரி ஏய்ப்பு:வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள் அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும். பிப்., 25 முதல், சோதனைகள் செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறப்பட்டது.பல இடங்களில், சோதனைகளும் தொடர்ந்து நடந்து வந்தன. சென்னையில், பல மொத்த விற்பனைக் கிடங்குகளை, வணிக வரித் துறை அதிகாரிகள் இழுத்து மூடும் நடவடிக்கைகளிலும் இறங்கினர்.அரசு எச்சரிக்கையையும் மீறி, வியாபாரிகள் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்ததால், பான் மசாலா பொருட்கள், தயாரிப்பு, இருப்பு, வினியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு தமிழக அரசு, தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
வணிகர்கள் கோரிக்கை:பான், குட்காவுக்கு தமிழக அரசு விதிக்கும் தடையை வணிகர் சங்கங்கள் வரவேற்று உள்ளன. அதே நேரத்தில், இருப்பு சரக்குகளை நிறுவனங்களிடம் ஒப்படைக்க, கால அவகாசம் வேண்டும் என்றும் கோரியுள்ளனர்."உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பான், குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்' என, சட்டசபையில் அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. அரசின் இந்த தடை அறிவிப்பை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிகர் சங்கங்களும் வரவேற்றுள்ளன.
கால அவகாசம்:இதை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், திருட்டுத்தனமாக விற்பனைக்கு வழிவகுத்து, லஞ்சத்திற்கு வழி வகுத்து விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். அதே நேரத்தில், பிற மாநிலங்களில் தடை விதித்தபோது, இருப்பு வைத்துள்ள சரக்குகளை, நிறுவனங்களிடமே திரும்ப அளிக்க வசதியாக, வணிகர்களுக்கு கால அவகாசம் தரப்பட்டது. அதுபோன்று, தமிழகத்திலும், வணிகர்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர். கால அவகாசம் கோரும் வணிகர்களின் கோரிக்கையை, அரசு பரிசீலிக்கும் என்றே, தெரிகிறது.- நமது நிருபர் குழு -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|