பதிவு செய்த நாள்
19 மே2013
00:39
சென்னை:அரசு மருத்துவமனைகளின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட, "மருத்துவ தகவல் மேலாண்மைத் திட்டம்' தமிழகத்தில், சரிவர செயல்படுத்தப்படவில்லை என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் (சி.ஏ.ஜி.,) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள்:பல்வேறு அரசு துறை திட்டங்கள் குறித்த, 2011 -12ம் ஆண்டிற்கான, சி.ஏ.ஜி., அறிக்கை, வெளியிடப்பட்டது. அதில், அரசு மருத்துவமனைகளில், செயல்பாட்டில் உள்ள "மருத்துவ தகவல் மேலாண்மைத் திட்டம்' குறித்து, தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த, 2008 ஜூன் முதல், 2012 மே மாதம் வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 20 அரசு மருத்துவமனைகளில், இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. அதில், குறிப்பிட்ட மருத்துவமனைகளில், புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்ற, 14.04 லட்சம் பேரில், 3.84 லட்சம் பேருக்கு, ஊசி மருந்து போட பரிந்துரைக்கப்பட்டது.ஆனால், மருத்துவ தகவல் மேலாண்மை திட்ட தகவல் தளத்தில், 8,702 பேருக்கு மட்டும், ஊசி மருந்து போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2.91 லட்சத்துக்கு பதிலாக, 2.41 லட்சமாக பதிவாகி உள்ளது. கடந்த, 2011ம் ஆண்டு, நவம்பர் முதல், 2012ம் ஆண்டு மே மாதம் வரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கும்பகோணம், ஆவுடையார்கோவில் உள்ளிட்ட, 16 இடங்களில், அரசு மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
காலாவதி தேதி:அதில், 26.17 லட்சம் பதிவுகளில், ஒரே குறியீட்டு எண் மற்றும் தொகுதி கொண்ட மருந்துகளின், 1.42 லட்சம் பதிவுகளில், காலாவதி தேதிகள், டி.என்.எம்.எஸ்.சி.,தகவல் தளத்தில் இருந்த தேதிகளில் இருந்து வேறுபட்டு இருந்தது தெரியவந்தது.இவ்வாறு, தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|