பதிவு செய்த நாள்
22 மே2013
00:28
புதுடில்லி:இந்தியாவில், பொதுத் துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்களில், லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள், தங்கள் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்காமல் உள்ளனர்.
இதனால், கடந்த 2011-12ம் நிதியாண்டு நிலவரப்படி, 1.90 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீட்டு பாலிசிகள் காலாவதியாகியுள்ளதாக, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா) தெரிவித்துள்ளது.
பிர்லா சன் லைப்:தனியார் துறையை பொறுத்தவரை, காப்பீட்டு பாலிசியை புதுப்பிக்காத காப்பீட்டுதாரர்களின் எண்ணிக்கையில், பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.இந்நிறுவனத்தில், பங்கு முதலீடு சார்ந்த "யூலிப்' காப்பீட்டு திட்டங்களை தவிர்த்து, இதர காப்பீட்டு திட்டங்களில், முதலீட்டாளர்கள் பாலிசியை புதுப்பிக்கத் தவறியதால், 51 சதவீத காப்பீட்டு கணக்குகள் காலாவதியாகி உள்ளன.அடுத்த இடங்களில், பியூச்சர் ஜெனரலி (49 சதவீதம்), ஐ.சி.ஐ.சி.ஐ. புரொடன்ஷியல் (42 சதவீதம்), ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் (38 சதவீதம்) மற்றும் பார்தி ஏஎக்ஸ்ஏ (36 சதவீதம்) ஆகியவை உள்ளன.
பொதுத் துறையை சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனத்தில், கடந்த சில ஆண்டுகளாக, பாலிசியை புதுப்பிக்க தவறியதால், காலாவதியான காப்பீட்டு பாலிசிகளின் பங்களிப்பு, 4 - 5 சதவீதம் என்ற அளவிலேயே குறைந்து காணப்படுகிறது.கடந்த 2008-09ம் நிதியாண்டு, பொது மற்றும் தனியார் காப்பீட்டு துறைகளில், காலாவதியான பாலிசிகளின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இது, அடுத்து மூன்று நிதியாண்டுகளில், கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. காப்பீட்டுதாரர்கள், பாலிசியை புதுப்பிக்க தவறுவதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, சில முதலீட்டாளர்கள், பாலிசிகளை புதுப்பிக்க விரும்பாமல், வேறு சில நிறுவனங்களின் கவர்ச்சியான திட்டங்களுக்கு மாறிவிடுகின்றனர்.
பண தட்டுப்பாடு: நீண்ட கால அடிப்படையில், காப்பீட்டு திட்டத்தில் சேரும் முதலீட்டாளர்கள், பொறுமை இழந்தோ அல்லது பணத்தட்டுப்பாடு காரணமாகவோ, பாலிசியை புதுப்பிக்காமல் விட்டு விடுகின்றனர்.ஒரு காப்பீட்டு திட்டத்தில், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல், தொடர்ந்து பிரிமியம் செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களில், 50 சதவீத காப்பீட்டுதாரர்கள் மட்டுமே, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும், தொடர்ந்து பாலிசியை புதுப்பித்து வருவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.
தரகு தொகை:உறுதி அளிக்கப்பட்ட வருவாய் தரும், 10 -15 ஆண்டு கால காப்பீட்டு திட்டங்களில் தான், பாலிசியை புதுப்பிப்பது குறைந்து வருகிறது.இது தவிர, காப்பீட்டு முகவர்கள், அதிக தரகு தொகைக்கு ஆசைப்பட்டு, தவறான வாக்குறுதிகளை தந்து, ஆதாயம் குறைந்த காப்பீட்டு திட்டங்களில் முதலீட்டாளர்களை சேர்த்து விடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாகவும், காப்பீட்டு தாரர்கள், பிரிமியத்தை தொடர்ந்து கட்டாமல் விட்டு விடுகின்றனர்.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், இது போல், வர்த்தக நெறிமுறைகளுக்கு மாறாக செயல்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் மீது, காப்பீட்டு குறை தீர்ப்பாயத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்து உள்ளன.இவற்றில், மூன்றில் ஒரு பங்கு புகார்கள், "சொல்வது ஒன்று; செய்வது வேறு' என்பதன் அடிப்படையில், காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன என்ற புகார்கள் ஆகும்.
பல காப்பீட்டுதாரர்கள், காலாவதியான பாலிசிகளில், அதுவரை செலுத்திய பிரிமியத்தை கூட பெறாமல் விட்டு விடுகின்றனர். அவர்கள், காப்பீட்டு முகவரையோ அல்லது அருகில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு, உரிய ஆவணங்களை அளித்து, பணத்தை பெற்றுக் கொள்ளலாம். எனினும், இது, சம்பந்தப்பட்ட காப்பீட்டு திட்டங்களின் விதிமுறைகளை பொறுத்தது.
தனி நிதியம்:பாரம்பரியமான ஒரு காப்பீட்டு திட்டத்தில், மூன்று ஆண்டுகள் பிரிமியம் செலுத்தி, பின்னர் கட்டாமல் விட்டு விட்டால், காப்பீட்டு நிறுவன விதிமுறைப்படி, பாலிசி ஒப்படைப்பு தொகையை, காப்பீட்டுதாரர் பெறலாம்.அதே சமயம், பங்கு சார்ந்த "யூலிப்' திட்டங்களில், ஐந்து ஆண்டுகளுக்குள் பிரிமியம் செலுத்துவதை நிறுத்தி விட்டால், அத்தொகை, தனி நிதியத்தில் சேர்க்கப்பட்டு, ஐந்தாண்டுகளுக்கு பின், சிறிய அளவிலான ஊக்கத் தொகையுடன் காப்பீட்டுதாரருக்கு வழங்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|