பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
00:13
புதுடில்லி:இறக்குமதி செய்யப்படும், பருப்பு வகைகள் மீதான சுங்க வரியை உயர்த்த வேண்டும் என, வர்த்தகர்களும், விவசாயிகளும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுங்கவரி:உள்நாட்டு உற்பத்தியை விட, இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளின் விலை, சற்று குறைவாக உள்ளது. எனவே, மத்திய அரசு, இவற்றின் மீதான சுங்க வரியை உயர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, நடப்பு கரீப் பருவத்தில், உற்பத்தியாகும், ஒரு குவிண்டால் துவரம் பருப்பிற்கு, மத்திய அரசு, 4,500 ரூபாயை குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயித்துள்ளது.ஆனால், உள்நாட்டில், மூலப் பொருட்கள் மற்றும் உரங்களின் விலை அதிகரித்துள்ளது. இவை தவிர, கூலியாட்களுக்கான சம்பளமும் உயர்ந்துள்ளது.எனவே, மத்திய அரசு, ஒரு குவிண்டால், துவரம் பருப்பிற்கான ஆதரவு விலையை, 5,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மகாராஷ்டிரா:இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைளின் விலை, உள்நாட்டு விலையை விட, குறைவாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, துவரம் பருப்பு அதிகளவில் உற்பத்தியாகும், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், ஒரு குவிண்டால் துவரையின் விலை, சராசரியாக 4,200 ரூபாய் வரை உள்ளது.இந்நிலையில், மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்படும், ஒரு குவிண்டால் பழைய துவரையின் விலை, 4,000 ரூபாய் என்ற அளவிலும், புதிய துவரையின் விலை, 4,100 ரூபாய் என்ற அளவிலும் உள்ளது.
கொண்டைக்கடலை:ஒரு குவிண்டால், கொண்டைக் கடலையின் குறைந்தபட்ச ஆதரவு விலை, 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்தையில் இதன் விலை, கடந்த 24 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 2,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, விவசாயிகளை மிகவும் பாதிப்பதாக உள்ளது.
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, உற்பத்தி இல்லாததால், மத்திய அரசு, ஆண்டுக்கு, 30 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வருகிறது. இந் நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, மிகவும் சரிவடைந்து வருவதால், பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. கொள் முதல் இதனால், வர்த்தகர்கள் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து, மும்பையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளிடம் இருந்து பருப்பு வகைகளை அதிகளவில் கொள்முதல் செய்து, அவற்றை ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும்,' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|