பதிவு செய்த நாள்
09 ஆக2013
00:26
புதுடில்லி:பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த, 2009ம் ஆண்டு, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்ததும், நாள்தோறும், 20 கி.மீ., தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயித்தது.
புள்ளிவிவரம்:ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த இலக்கை எட்டும் அளவிற்கு, நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவில்லை என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2009-10ம் நிதிஆண்டில், நாள்தோறும் சராசரியாக, 14.5 கி.மீ., தூரம் மட்டுமே நெடுஞ்சாலைகள் போடப்பட்டு உள்ளன.
இது, 2010-11ம் நிதியாண்டில், 11.87 கி.மீ., ஆக குறைந்தது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், 13.73 கி.மீ., மற்றும் 2012-13ம் நிதியாண்டில், 15.7 கி.மீ., தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன.நடப்பு 2013-14ம் நிதிஆண்டில், மொத்தம், 5,942 கி.மீ., தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம் இடப்பட்டுள்ளது. இதில், சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 19 சதவீதம், அதாவது, 1,183 கி.மீ., அளவிற்கே நெடுஞ்சாலைகள் போடப்பட்டு உள்ளன.
இதன்படி, நாள்தோறும் சராசரியாக, 13.14 கி.மீ., தூரம் என்ற அளவிற்கே, நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன.கடந்த 2012-13ம் நிதிஆண்டு முதல், நெடுஞ்சாலைப் பணிகள் வழங்குவது குறைந்துள்ளது. இருந்தபோதிலும், 2009-10 மற்றும் 2010-11ம் நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகள் முடிவடைந்து வருவதால், பூர்த்தியான நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை, சென்ற நிதியாண்டில் அதிகரித்து உள்ளது.
பணிகள்:கடந்த 2012-13ம் நிதிஆண்டில், 5,700 கி.மீ., தூரம் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், போடப்பட்ட, 2,939 கி.மீ., நெடுஞ்சாலைகளும் அடங்கும்.நடப்பு நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3,000 கி.மீ., சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பழங்குடியினர்:இத்திட்டம் சாராத பிரிவின் கீழ், 1,292 கி.மீ., சாலையும், வட கிழக்கு பிராந்தியங்களில், சிறப்பு உயர்மட்ட நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 550 கி.மீ., மற்றும் பழங்குடியினர் நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், 1,100 கி.மீ., சாலைகளும் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு, பொதுத் தேர்தல் வருவதைஒட்டி, நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|