பதிவு செய்த நாள்
16 ஆக2013
00:48
புதுடில்லி:பிரேசில், வியட்னாம் நாடுகளில், முந்திரி உற்பத்தி சரிவடைந்து உள்ளதால், இந்திய முந்திரிக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி அதிகரித்துள்ளது. மேலும்,பாதாம் பருப்பு விலை உயர்வால், அதற்கு பதிலாக, முந்திரியை நுகர்வோர் வாங்கத் துவங்கி உள்ளனர். இதுவும், முந்திரிக்கான தேவையை உலகளவில் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த சாதகமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இந்தியாவில் இருந்து அதிக அளவில் முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு:மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு வீழ்ச்சியும், இந்திய முந்திரி ஏற்றுமதியாளர் களுக்கு, நல்ல அளவில் லாபத்தை ஈட்டித் தருவதாக உள்ளது. இதனால், முந்திரி ஏற்றுமதியாளர்கள், ஆர்வத் துடன்,அதனை ஏற்றுமதி செய்து வருகின்றனர். நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரை யிலான மூன்று மாதங்களில், நாட்டின் முந்திரி ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 1,940 டன் அதிகரித்து, 26,152 டன்னில் இருந்து, 28,092 டன்னாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையில், முந்திரி ஏற்றுமதி, 27 கோடி ரூபாய்உயர்ந்து, 1,075 கோடியில் இருந்து, 1,102 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், கச்சா முந்திரி இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், 1,234 கோடியில் இருந்து, 1,108 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. இது, அளவின் அடிப்படையில், 2,06,959 டன்னில் இருந்து, 2,01,974 டன்னாக குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், முந்திரி ஏற்றுமதி, 4,420 கோடி ரூபாயாக இருந்தது. இதை விட, நடப்பு நிதியாண்டில், முந்திரி ஏற்றுமதி அதிகரிக்கும் என, தெரிகிறது.
உற்பத்தி:பிரேசில், வியட்னாம் ஆகிய நாடுகளில், முந்திரி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், இந்நாடுகளின் முந்திரி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி, உள்ளது.சென்ற ஜூன் மாதம், இந்தியா, 8,188 டன் முந்திரியை ஏற்றுமதி செய்தது. இது, ஜூலை மாதம், 10,150 டன்னாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைவர் அரிகிருஷ்ணன் ஆர். நாயர் கூறுகையில், ""அமெரிக்கா வின் கலிபோர்னியாவில், பாதாம் உற்பத்தியில், விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதனால், பாதாம் பருப்பிற்கு பதிலாக, முந்திரி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, தற்போது, முந்திரிக்கான தேவை உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப, நாட்டின் முந்திரி உற்பத்தியும், சிறப்பாக உள்ளது,'' என்று தெரிவித்தார். உள்நாட்டில், முந்திரி உற்பத்தி அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து, கச்சா முந்திரியை இறக்குமதி செய்வதும் குறைந்து உள்ளது.
இதன் காரணமாக, முந்திரிக்கான இறக்குமதி செலவினங்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும்.இந்தியாவில் முந்திரி உற்பத்தியை விட, அதற்கான தேவை அதிகமாக உள்ளது. இதனால், கச்சா முந்திரி இறக்குமதி செய்யப் பட்டு, பதப்படுத்தப்பட்டு, சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இந்த வகையில், இந்தியாவிற்கு, ஆண்டுக்கு, 8-9 லட்சம் டன் என்ற அளவில், கச்சா முந்திரி தேவைப்படுகிறது.
ஆப்ரிக்கா:முந்திரி அதிகம் விளையும், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில், நல்ல மழைப் பொழிவு காணப் படுகிறது.தற்போதைய நிலவரப்படி, உள்நாட்டில், 6- 7 லட்சம் டன் முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது. இது, நடப்பு நிதியாண்டில்,மேலும் அதிகரிக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது.ஆப்ரிக்காவில் முந்திரி விலையில் ஏற்பட்டுள்ள சரிவும், இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆப்ரிக்காவில், ஒரு டன் கச்சா முந்திரியின் விலை, 1,000 டாலரில் இருந்து, 800 டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் ஏற்படும் தாக்கத்தை தடுக்கும் வகையில், இந்திய ரூபாய்மதிப்பு குறைந்துள்ளது.சென்ற ஜூன் மாதம், கச்சா முந்திரி இறக்குமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 34 சதவீதம் குறைந்து, 80,578 டன்னாக சரிவடைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|