பதிவு செய்த நாள்
30 ஆக2013
01:32
புதுடில்லி:நடப்பாண்டில், உலகின் பல்வேறு நாடுகளில் கோதுமை உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில், நடப்பாண்டு, ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில், கோதுமை உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி விலை:இந்நிலையில்,சர்வதேச சந்தையில், ஒரு டன் கோதுமையின் விலை, 260 - 270 டாலர் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், மத்திய அரசு, ஏற்றுமதிக்கான ஒரு டன் கோதுமையின்சராசரி விலையை, 300 டாலராக நிர்ணயித்துள்ளது. இது,சர்வதேச சந்தை விலையை விட, அதிகமாக உள்ளதால், நம் நாட்டின் கோதுமை ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும் என,வர்த்தகர்கள் தெரிவித்தனர்.எனவே, மத்திய அரசு, ஏற்றுமதிக்கான கோதுமையின் விலையை குறைக்க, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு, நடப்பாண்டில், இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பிலிருந்து, 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை(ஒரு டன்) 300 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது,சர்வதேச விலையை விட அதிகமாக உள்ளது. எனவே,சர்வதேச விலைக்கு ஏற்ப கோதுமையின் விலையை குறைக்க வேண்டும் என, அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், இந்திய உணவுக் கழகத்திடம் அதிகளவு கோதுமை கையிருப்பு உள்ளது.
அனுமதி:இதை, பாதுகாத்து வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, கடந்த மாதம், 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது.ஏற்றுமதிக்கான கோதுமையை, பொதுத் துறையைச் சேர்ந்த, எம்.எம்.டி.சி., பி.இ.சி., மற்றும் எஸ்.டி.சி., ஆகிய நிறுவனங்கள் வாயிலாக ஏற்றுமதி செய்ய, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, கடந்தாண்டு இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பிலிருந்து, 45 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய, அனுமதி வழங்கியிருந்தது. அவ்வாண்டு, சர்வதேச சந்தையில், கோதுமைக்கு பற்றாக்குறை இருந்ததை அடுத்து, ஒரு டன் கோதுமைக்கான சராசரி விலை, 310 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் ஏற்றுமதி வாயிலாக, 7,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
தற்போது, உலகின் பல்வேறு நாடுகளில் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளதால், சர்வதேசசந்தையில் இதன் விலை குறைந்துள்ளது. எனவே, மத்திய அரசு, ஒரு டன் கோதுமையின் சராசரி விலையை, 270 டாலராகக் குறைக்க வேண்டும். இதனால், நமக்கு பாதிப்பு ஏற்படாது. ஏனெனில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மிகவும் சரிவடைந்துள்ளதால், விலை குறைப்பின் வாயிலாக ஏற்படும் இழப்பை ஈடு செய்து கொள்ள முடியும் என, பி.இ.சி., நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நம் நாட்டிலிருந்து, கடந்த ஆண்டு, தென்கொரியா, எத்தியோப்பியா, வங்கதேசம், ஏமன், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.
போக்குவரத்து செலவு:நம் நாட்டின் கோதுமை,சர்வதேச தரத்திற்கு இணையாக உள்ளது. மேலும், அண்டை நாடுகள், அருகாமையில் உள்ள நம் நாட்டிலிருந்து, குறைந்த போக்குவரத்து செலவில், கோதுமையை இறக்குமதி செய்து கொள்ள முடியும். இதனால், அந்நாடுகள், போக்குவரத்து செலவில், ஒரு டன் கோதுமைக்கு, 15 டாலர் சேமிக்க முடியும் என, அந்த உயரதிகாரி மேலும் தெரிவித்தார்.நடப்பு 2013-14ம் பருவத்தில்,சர்வதேச அளவில், கோதுமை உற்பத்தி, 76 லட்சம் டன் அதிகரித்து, 70.54 கோடி டன்னாக உயரும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்து உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|