பதிவு செய்த நாள்
19 செப்2013
10:37
நாடு முழுவதும், வெங்காயம் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று, பெரு நகரங்களில், ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் லாபம் சம்பாதிப்பதற்காக, வெங்காயம் பதுக்கலும், அதிகரித்து வருகிறது. ஏற்றுமதிக்கு தடை விதிக்காவிட்டால், விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தான், வெங்காயம் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. இங்கு விளையும், வெங்காயம், ஈரப்பதம் குறைவானது என்பதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, வசதியாக உள்ளது.கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில், சில மாவட்டங்களில், பெரிய வெங்காயம் மட்டுமின்றி, சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறிய ரக வெங்காயமும் பயிரிடப்படுகிறது.
சரிவு:ஆனால், உள்ளூர் தேவைக்கே, அவை போதுமான அளவில் இருப்பதில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் விளையும் வெங்காயம் தான், நாடு முழுவதும், சப்ளை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் இந்த ஆண்டு பெய்து வரும் பருவமழையால், இந்த மாநிலங்களில், வெங்காய உற்பத்தி கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், கடந்த மே மாதம் முதல் வெங்காயம் விலை, விறு விறுவென உயர்ந்து வருகிறது. ஆரம்பத்தில், கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது, ஜூலை மாதம், 80 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுதி செய்யப்பட்டதால், ஆகஸ்ட் மாதத்தில், மிக அதிக விலைக்கு வெங்காயம் விற்கப்பட்டது. தற்போது, மீண்டும் வெங்காயம் விலை உச்சத்தை அடைய ஆரம்பித்துள்ளது. டில்லி, கோல்கட்டா, மும்பை, உள்ளிட்ட பெருநகரங்களில், ஒரு கிலோ, 80 ரூபாய் வரை வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
பதுக்கல்:சென்னையை பொறுத்தவரை, மகாராஷ்டிரா வெங்காயம், கிலோ, 65 - 70 ரூபாய்; ஆந்திரா, கர்நாடகா மாநில வெங்காயம், 55 - 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் நாட்களில், வெங்காயம் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பல மாநிலங்களில், பதுக்கல் அதிகரித்து வருகிறது. விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு, அதிகரித்துள்ள நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு, மத்திய அரசு இதுவரை தடை விதிக்கவில்லை. எனவே, ஏற்றுமதிக்காக எனக்கூறி வெங்காயத்தை சாதாரண கிடங்கு, குளிர்பதன கிடங்குகளில், அதிக அளவில் பதுக்கி வைக்கின்றனர். தமிழகத்திலும், சென்னை உள்ளிட்ட இடங்களில், வெங்காய பதுக்கல் கடந்த, இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது.
இது குறித்து, சென்னை கோயம்பேடு சந்தை வெங்காய வியாபாரி முரளி கூறியதாவது: மகாராஷ்டிரா வெங்காயத்தை தான் இருப்பு வைக்க முடியும். சென்னைக்கு, மூன்றுமாநிலங்களில் இருந்து வரத்து உள்ளதால், மற்ற நகரங்களை காட்டிலும், இங்கு வெங்காயம் விலை குறைவாக உள்ளது. ஏற்றுமதியை குறைக்காத வரை, வெங்காயம் விலை ஏற்றத்தை தடுக்க முடியாது. மகாராஷ்டிரா மாநிலத்தில், தற்போது பயிரிடப்பட்டுள்ள வெங்காயம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான், அறுவடைக்கு தயாராகும்.எனவே, அதுவரை வெங்காயம் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை. வெங்காயத்தை இறக்குமதி செய்து தான், விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்லை. ஏற்றுமதியை குறைத்தாலே, உள்நாட்டின் வெங்காய தேவையை பூர்த்தி செய்ய முடியும்.இவ்வாறு, முரளி கூறினார்.
கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு: "வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை பயன்படுத்தி, செயற்கையான விலை ஏற்றத்தை ஏற்படுத்துவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இருப்பு
வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தில், 90 சதவீதம் காலியாகி விட்ட நிலையில், நான்கு லட்சம் டன் வெங்காயம் மட்டுமே, இருப்பு உள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை, தலைநகர் டில்லியில், நேற்று, ஒரு கிலோ வெங்காயம், 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. விலை உயர்வை தடுக்க, மத்திய அரசு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெங்காயத்தின் சப்ளை, தேவைக்கு ஏற்ற வகையில் இல்லை என்பது உண்மை தான். பற்றாக்குறை உள்ளது. இதைப் பயன்படுத்தி, ஒரு சிலர், செயற்கையான விலை உயர்வை ஏற்படுத்துவதாக, புகார்கள் வந்துள்ளன. அதிக லாபம் பெற வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற நடவடிக்கைகளில், அவர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும், இந்த செயற்கை விலை உயர்வை ஏற்படுத்துவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, தேசிய விவசாய கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, "வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வேண்டுமானால், அதன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை, டன்னுக்கு, 56,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்' என, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் வெங்காயம் விலை: மதுரை மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் விலை ரூ. 60 வரை விற்கப்பட்டது.சிறிய வெங்காயம் ரூ. 45 வரை விற்றது. சென்ட்ரல் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் விலையைக் காட்டிலும், நேற்று கிலோவிற்கு ரூ. 7 வரை அதிகரித்ததாகவும், இரு வெங்காயமும் போட்டி போட்டு விலை உயர்ந்ததாகவும், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் தெரிவித்தார். தெருக்களில் பலசரக்கு சில்லரை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 80 வரை விற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|