பதிவு செய்த நாள்
28 செப்2013
13:57
மும்பை : ஆதார் எண் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் அனைத்து அம்சங்களும் அமைய வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தி சில வாரங்களிலேயே ஆதார் அடையாள அட்டையை மையமாகக் கொண்டு கடன் மற்றும் சேமிப்பு கணக்கை துவங்கும் முறையை ஆக்சிஸ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.
ஆக்சிஸ் வங்கி தகவல் : ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட விபரங்களை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர் சேவையை வழங்க தீர்மானித்துள்ள ஆக்சிஸ் வங்கி, இந்த சேவையை 25 கிளைகளில் அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது. முகவரி சான்று மற்றும் அடையாள அட்டைக்கு பதிலாக ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவுகளை மட்டும் அளித்துவாடிக்கையாளர்கள் கடன் மற்றும் சேமிப்பு கணக்குகளை துவங்கலாம். இந்த ஆதார் பதிவு எண்ணைக் கொண்டு நாட்டின் எந்த பகுதியிலும் வங்கி கணக்கை துவங்கவும் ஆக்சிஸ் வங்கி வழிவகை செய்துள்ளது. முகவரி சான்று, அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றிற்கு பதிலாக ஆதார் அட்டையில் உள்ள விபரங்களைக் கொண்டு வாடிக்கையாளரின் விபரங்கள் பதிவு செய்யப்படும் என ஆக்சிஸ் வங்கியில் தலைவர் ஜெய்ராம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான படிவத்தில் வாடிக்கையாளர் அளிக்க வேண்டிய விபரங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் கடன் கணக்குகளுக்கு தேவைக்கு ஏற்ப சில கூடுதல் விபரங்கள் கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர் வசதி : வங்கி கணக்கை துவக்குவதில் நடுத்தர மக்களைப் போன்று கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு விபரம் அளிக்கும் வசதி குறைவாகவே உள்ளதாகவும், இதனை தவிர்ப்பதற்காகவே இத்தகைய முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வேறு பகுதிகளில் இருந்து வந்து மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் தங்கி பணியாற்றுபவர்களுக்கு இந்த ஆதார் எண் மூலம் வங்கிக் கணக்கை துவக்கும் வசதி பெரிதும் பயன் தருவதாக அமையும் எனவும், அத்தகைய மக்கள் வங்கி கணக்குகளை துவங்கவும் அதற்கான சான்றுகளை அளிக்கவும் பெரும் அவதிபட்டு வருவதாகவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். தனிநபர் தனது கைரேகை உடனான புகைப்படத்தை பொருத்தி சிறிய அளவிலான வங்கி கணக்கை துவக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த வங்கிக் கணக்கை ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்த சேவையை ஆக்சிஸ் வங்கி துவக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டையை இது போன்ற பொது சேவைகளை பெற பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து இது போன்றதொரு சேவையை ஒரு வங்கி துவங்க உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது சில்லரை கடன் சேவையில் புதிதொரு மறுமலர்ச்சியாக அமையும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|