பதிவு செய்த நாள்
26 அக்2013
05:14
புதுடில்லி:வரும் 2014ம் ஆண்டில் இந்தியாவின், பால் உற்பத்தி, 14.06 கோடி டன்னாக அதிகரிக்கும் என, அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது. இது, நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும் உற்பத்தியை விட, 4.5 சதவீதம் அதிகமாகும்.
வேளாண் உற்பத்தி:உலகளவில், பால் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாகத் திகழும் இந்தியாவில், நடப்பு ஆண்டில், பால் உற்பத்தி, 13.45 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்தாண்டை விட, சற்று குறைவாகும்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பருவமழை பொழிவு நன்கு உள்ளது. இதனால், நாட்டின் வேளாண் உற்பத்தி அதிகரித்து, கிராமப் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், பாலுக்கான தேவை அதிகரித்துள்ளதுடன், நுகர்வோரின் செலவிடும் வருவாயும் அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால், இந்தியாவில் பால் உற்பத்தி அதிகரிப்பதுடன், இதன் பயன்பாடும் அதிகரிக்கும்.பாலுக்கான கொள்முதல் விலை அதிகரித்துள்ளதுடன் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான தேவையும் வளர்ச்சி கண்டுள்ளது.
முதலீடு:இந்நிலையில், பல தனியார் துறை நிறுவனங்கள், பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், பதப்படுத்துவதற்கும் அதிகளவில் முதலீடு மேற்கொண்டு வருகின்றன.இதையடுத்து, வரும் 2014ம் ஆண்டில் இந்தியாவில் பால் உற்பத்தி, 14.06 கோடி டன்னாக அதிகரிக்கும். இதில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் உற்பத்தி, 19 ஆயிரம் டன் அதிகரித்து, 4.89 லட்சம் டன்னாக உயரும்.
இதே போன்று, ஒட்டு மொத்த வெண்ணெய் (நெய் உட்பட) உற்பத்தியும், வரும் ஆண்டில், 3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 48.80 லட்சம் டன்னாக அதிகரிக்கும். தற்போது, இதன் உற்பத்தி, 47.40 லட்சம் டன்னாக உள்ளது.
இந்தியாவில், பால் உற்பத்தி அதிகரித்து வரும் அதே நேரத்தில், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களால், வரும் ஆண்டில், உள்நாட்டில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடருக்கான நுகர்வு,4.25 லட்சம்டன்னாக அதிகரிக்கும். இதன் ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்க வேளாண் துறையின் மதிப்பீட்டின்படி, உள்நாட்டில் பால் பயன்பாடு, கடந்த பத்து ஆண்டுகளில், ஆண்டுக்கு, 6.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.இந்தியாவில், மக்கள் தொகை பெருகி வரும் அதே நேரத்தில், மக்களின் வருவாயும் உயர்ந்து வருகிறது. பாலில் அதிக புரதச் சத்துக்கள் இருப்பதால், மக்கள் பால் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
விற்பனை:இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில், 40 சதவீதம் பண்ணையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 60 சதவீத பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில், 70 சதவீத பால், அமைப்பு சாரா நிறுவனங்கள் வாயிலாகவும், 30 சதவீதம், அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் வாயிலாகவும் விற்பனை செய்யப்படுவதாக, அமெரிக்க வேளாண் துறையின் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|