பதிவு செய்த நாள்
27 அக்2013
00:27
மும்பை:கடந்த செப்டம்பர் மாதத்தில், வங்கிகள் வழங்கிய சில்லரை கடன், 17.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,65,300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,18,800 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், வங்கிகளின் உணவு சாரா கடன், 15.9 சதவீதத் தில் இருந்து, 18.2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார வளர்ச்சி:நடப்பு நிதியாண்டில், இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி, மதிப்பீட்டை விட, குறைவாக இருக்கும் என, உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் தெரிவித்து உள்ளன.இந்த நிலையில், வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரித்துஇருப்பது, கடன்களுக்கான தேவை உயர்ந்து வருவதையும், பல்வேறு துறைகள் வளர்ச்சி கண்டு வருவதையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம், வங்கிகளின் உணவு சாரா கடன், 17 சதவீதம் வளர்ச்சி கண்டுஇருந்தது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 15.9 சதவீதமாக இருந்தது.
சென்ற செப்டம்பரில், வங்கிகள், தொழில்துறைக்கு வழங்கிய கடன், 17.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 23,71,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 20,16,300 கோடி ரூபாயாக இருந்தது.பொறியியல், கட்டுமானம், கண்ணாடி மற்றும் கண்ணாடி பொருட்கள், சுரங்கம் மற்றும் குவாரிகள் துறைகள் நீங்கலாக, இதர துறைகளுக்கு, வங்கிகள் வழங்கிய கடன், குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.
சேவை துறை:சென்ற செப்டம்பரில், சேவைகள் துறைக்கு, வங்கிகள் வழங்கிய கடன், 14.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12,55,300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 10,27,900 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், தனி நபர் கடன், 17.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,18,800 கோடியில் இருந்து, 9,65,300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே மாதத்தில், முன்னுரிமை துறைகளுக்கு, வங்கிகள் வழங்கிய கடன், 17.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 13,98,400 கோடியில் இருந்து, 16,44,500 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
பண்ணை கடன்:தொழில் துறைக்கான கடன், வளர்ச்சி கண்டுள்ள நிலையில், சென்ற செப்டம்பர் மாதம், வங்கிகளின் பண்ணைக் கடன் வளர்ச்சி, 13.2 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 20 சதவீதமாக காணப்பட்டது.இதே மாதத்தில், கிரெடிட் கார்டு கடன்களின் நிலுவை, 2.1 சதவீதம் அதிகரித்து, 23,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.47 வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன்களின் அடிப்படையில், மேற்கண்ட புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பண்டிகை காலம் என்பதால், வங்கிகளின் உணவு சாரா கடன் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், பல வங்கிகள், கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால், வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் அதிகரிக்கும் என, தெரிகிறது.நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கார் கடன்களுக்கான வட்டியை, 10.55 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும், கடன் தொகையில், 0.51 சதவீதம் என்ற அளவில் வசூலிக்கப்பட்டு வந்த, பரிசீலனைக் கட்டணமும், ஒரே சீராக, 500 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாகன கடன்:இதேபோன்று, பஞ்சாப் நேஷனல் பேங்க், கார் கடனுக்கான வட்டியை, 10.65 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும், இருசக்கர வாகனம் மற்றும் நுகர்வோர் சாதனக் கடனுக்கான வட்டியும், முறையே, 12.2 சதவீதம் மற்றும், 12.75 சதவீத மாக குறைக்கப்பட்டுள்ளன.இவை தவிர, பல வங்கிகள், பண்டிகை காலத்தை முன்னிட்டு, பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளதால், நடப்பு அக்டோபர் மாதமும், வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரிக்கும் என, தெரிகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|